Sunday, November 22, 2009

சகாயம் ஐ ஏ எஸ்

இந்த வாரம் விகடனில் வந்த கட்டுரை.... இப்படியும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது .

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.

நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

நன்றி : விகடன்

Thursday, October 1, 2009

உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து தியேட்டருக்கு சென்று பார்த்த படம். நல்ல படம். கமல், மோகன் லால், அவருக்கு கீழ் பணிபுரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், டிவி நிருபர் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.வசனத்தை சிறப்பாக எழுதி இருந்தார் முருகன். ஒளிப்பதிவும் மிக அருமை. ஹிந்தி படத்தை விட மிக அருமையாக இருந்தது. செயற்கையான பாடல் கட்சிகள் இல்லாமல், காமெடி என்ற பெயரில் ஆபாசம் செய்யாமல் இரண்டு மணி நேரத்தில் விறு விறுப்பான படம்!

படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, கமல் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு படத்தின் வெற்றியைப் பற்றி சிலாகித்து பேசினார். Youtube இல் பார்த்தேன். அதிர்ந்தேன். தான் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது போல பேசி மற்றவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்தார். ஸ்ருதியைப் பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றிப் பேசியது ரொம்ப கம்மி. பலரும் வசனத்தை பெரிதும் பாராட்டினர். உண்மை. வசனங்கள் எல்லாம் மிக அருமையை இருந்தது. ஆனால், படத்தின் வசனகர்த்தாவான முருகனைப் பற்றி பேச்சே இல்லை. அவருடைய பேரை எந்த இடத்திலும் உச்சரிக்கவே இல்லை! அதை விடக் கொடுமை, இந்தக் கதையை தானே சிந்திததுபோல் பேசியதுதான். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணம் படத்தின் கதை. அது கதையின் சொந்தக் காரரான நீரஜ் க்கு மட்டுமே போய் சேரும்.

இன்னொரு கொடுமை மோகன் லாலைப் பற்றி பேசாதது. உண்மையிலேயே , கமலை விட எனக்கு லாலின் நடிப்புதான் பிடித்திருந்தது. அனுபம் கேர் ரை விட பல மடங்கு சிறப்பாக செய்து படத்தை துடிப்புடன் கொண்டு செல்பவர் அவர்தான். இப்படி எல்லாரையும் இருட்டடிப்பு செய்து, ஏன் இப்படி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் தான் மகளைப் பற்றி ஒரே பேச்சு. கமல் ஒரு சிறந்த நடிகர் , நல்ல சினிமா அறிவுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மற்றவரை பாராட்டும் குணம் இப்பொழுது அவரிடம் குறைந்து வருகிறது. "நான்" என்ற ஆணவமோ?

இந்தக் கதையைப் போல, சுயமாக சிந்தித்து, வருங்காலத்தில் நல்ல படங்களை ( தசாவதாரம் போல் இல்லை!) கமல் எடுப்பார் என்று நம்புவோமாக.

Friday, September 18, 2009

விகடன் விமர்சனம் : ஈரம்

னதில் ஈரம் இல்லாதவர்களை அந்த 'ஈரம்' பழி வாங்கினால்... அதுதான் கதை!அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்துகிடக் கிறார் சிந்து மேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்குக் காரணம் என அடித்துச் சொல்கிறது அக்கம்பக்கம். ஆனால், 'நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல' என்று உறுதியாக நம்புகிறார் காவல் துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம், அவரும் சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களைத் தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால், சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேன னின் மரணம் கொலையா, தற்கொலையா,தொடர்ச் சியான மரணங்களுக்குக் காரணம் என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது ஈரம்!

ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண் ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி-சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்து மேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல் பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக் டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும் காவல் அதிகாரியின் இன்டெலி ஜென்ட்விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளைக் கடக்கும்போது எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலைக் கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன் அதே இயல்புடன் நடிக்க வும் செய்கிறார். திருச்சி கல்லூரியின் சராசரி மாணவி, புது மணப் பெண் எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை. வில்லனாக நந்தா. டி.வி-யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்து மேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒரு முறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் கிளாஸ்.

கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாகச் சொல்கிறார்கள். கொலையாளி
யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால், அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனைக் கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்?

அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்று கிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!


நன்றி : விகடன்


Wednesday, September 9, 2009

இலவச திருமணங்கள் தேவையா?

எப்போதான் இந்த இலவசங்கள் நிற்குமோ? இரண்டு லட்சத்து 29 ஆயிரம் திருமணங்களை நிதி கொடுத்து நடத்தியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும். எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாமலும், துணி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இங்கு என்னடா ன்ன, இலவச தொலைக்காட்சியும், பொங்கல் வெய்க்க மாளிகை சாமானும், குறைந்த விலையில் தரமான மதுவும் கொடுக்கிறார்கள். மக்கள் பணத்தில் தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்கள். கடைசியாக "இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது" என்று சொல்லி தனது ஆசையையும் வெளிப்படுத்திவிட்டார் தலைவர்.



செய்தி:


சென்னை :""தி.மு.க.,வின் குரலை அடக்க தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். தி.மு.க., சார்பில், 86 ஜோடிகளுக்கு நேற்று அண்ணா அறிவாலயத் தில் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை வீட்டுத் திருமணம் என்றால், 5,000 ரூபாய் வீதம் தந்து, பின் 10 ஆயிரம் ரூபாய் என விரிவாக்கி, 20 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.



ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் நிதி அளிக்கப்பட்டு நடந்த திருமணங்கள், இரண்டு லட்சத்து 29 ஆயிரம். அந்தப் பெரும் கடலில், இன்று நடக்கிற இந்த 86 திருமணங்களும் இணைகின்றன. இது என் 86 வயதைக் குறிக்கும் அடையாளமாக நடக்கிறது.வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறும்போது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் கிளம்பினேன். வாரத்தில் ஐந்து நாட்களாவது என் இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடக்கிறது. இங்கு 86 திருமணங்களை நடத்தி அவர்களுக்கு தரப்பட்ட சீர்வரிசைகள், விளக்கு, குடம், வேறு பொருட்கள், இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது.



அந்த அளவுக்கு பளபளக்கும் விளக்குள், குடங்கள், தாம்பாளங்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு நடத்தும் திருமணங்கள் இன்றி தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். நெருக்கடி காலத்தில், கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு, நம் கட்சியினர் சீர்திருத்த திருமணங்களில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், நெருக்கடி, அடக்குமுறைகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, கட்சியை தழைக்கச் செய்யும் வல்லமை தி.மு.க.,வினருக்கு உண்டு.எந்த வசதிகள் இருந்தாலும், எந்த வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டாலும், நம் குரல் ஓங்கி ஒலிக்கும். ஏனெனில், இது ஈ.வெ.ரா.,வின் குரல்; அண்ணா துரையின் குரல். இந்தக் குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்றார்.


நன்றி: தினமலர்

Monday, August 3, 2009

வாங்க, பழகலாம்!


ஜோசு என்ற புத்த ஞானி, மடத்தின் வரவேற்பறைக்குள் நுழைந் தார். தான் சந்தித்த முதல் துறவியைப் பார்த்து, ''உங்களை இதற்கு முன் சந் தித்திருக்கிறேனா?'' என்று கேட்டார். துறவி, ''இல்லை'' என்று பதிலிறுக்கவே, ''அப்படியானால் என்னுடன் தேநீர் அருந்துங்கள், வாருங்கள்!'' என்றார் ஞானி.

அடுத்து, உள்ளே நுழைந்த மற் றொரு துறவியைக் கண்ட ஜோசு, ''உங்களை இதற்கு முன் சந்தித்திருக் கிறேனா?'' என்ற அதே கேள்வியை எழுப்பினார். ''ஆம் சுவாமி! நான் உங்களை முன்பே சந்தித்திருக்கிறேன்!'' என்றார் துறவி. ''அப்படியானால் மிகவும் மகிழ்ச்சி! வாருங்கள், என்னு டன் தேநீர் அருந்துங்கள்!'' என்றார் ஞானி.

இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்த புத்த மடத்து நிர்வாகியான துறவி, ஞானி ஜோசுவைப் பார்த்து, ''சுவாமி! இரண்டு துறவிகளின் இரண்டு வித மான பதில்களுக்கும் நீங்கள் ஒரே விதமாகப் பதில் கூறி, அவர்களைத் தேநீர் அருந்த அழைத்தீர்கள்! உங்கள் செயல் எனக்குப் புரியவில்லையே?'' என்று தயங்கியபடி கேட்டார்.

''நீங்கள் இன்னும் இங்கேயேதான் இருக்கிறீர்களா?''

''ஆம் சுவாமி!''

''அப்படியானால் வாருங்கள். என் னுடன் கொஞ்சம் தேநீர் அருந்துங் கள்!'' என்று புன்னகைத்தார் ஞானி.

இப்படி ஒரு கதை 'ஜென்' கதை உண்டு.

அன்புள்ள வாசகர்களே! நீங்கள் இன்னமும் இங்குதான் இருக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள், கொஞ்சம் தேநீர் அருந்துங் கள். பேசுவோம்...


ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி மதிக்கிறான் (உள்ளுறவு), பிற ருடன் எப்படிப் பழகுகிறான் (உலக உறவு) என்பதை வைத்துத்தான் அவனை ஊரும் உலகமும் எடை போடுகிறது!

அமெரிக்காவில் நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தீர்களா னால், இந்தியா போல யாரும் அங்கு பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு உங்கள் அறிவை மீண்டும் சோதிப்பதில்லை. நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காணச் செய்கிறார்கள். அதன் மூலம், பிறரு டன் அவரால் எளிதாகப் பழக முடி யுமா, அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப்போக முடியுமா என்று பார்க்கிறார்கள்.

'என்னைப் பாராட்டும் ஒருவனை, உலகின் இரண்டாவது பெரிய மனித னாக நான் நினைக்கிறேன்!' என்றொரு வாசகம் உண்டு. இனிமையாகப் பழகும் ஒருவனிடம் எல்லோரும் இனிமையாகப் பழகத் துவங்குகிறார் கள். ஹாஸ்யமாகப் பேசும் ஒருவனு டன் இருப்பதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள். பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன் வருகிறது.

அறிவு, திறமை, கற்பனை, துணிச்சல், முடிவெடுக்கும் திறன், வியூகம் என்ற இவற்றுடன் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான மிக முக்கிய குணம் 'பழகும் தன்மை'தான்.

அதிகாரத்தின் முன்னிலையிலோ, செல்வாக்கின் முன்னிலையிலோ, பணத்தின் பின்பலத்திலோ, ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும். ஆனால், பிறருடன் உங்களால் அனு சரித்துப்போக முடியவில்லை என் றால், சுமுகமாகப் பழக முடியவில்லை என்றால், உங்கள் பதவி நிலைக்காது. அரசியல் உலகில் இத்தகைய ஆர்ப் பாட்டக்காரர்களின் பதவி ஆட்டம் காண்பதையும், பிறகு அவர்கள் பிறர் காலில் விழுவதையும் அன்றாடக் காட்சியாகக் காண்கிறோமே!

பிறருடன் பழகுதல் என்பது ஒரு கலை. வாருங்கள், பழகுவோம்!


நன்றி : விகடன்

Sunday, July 26, 2009

நீயா நானா - அருமையான விவாதம்!

நல்ல நீயா நானா ஷோவில் இதுவும் ஒன்று.


Part 1

Friday, July 10, 2009

நாடோடிகள் - விகடன் விமர்சனம்

ட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

சசிகுமார், பரணி, விஜய் மூவரும் கண்களில்கனவோடும் தோள்களில் தினவோடும் ராஜபாளையத்தை ரவுண்ட் கட்டும் நண்பர்கள். ஒரு பெருந் தொழில் அதிபரின் மகளான தன் காதலியைச் சேர்த்துவைக்க உதவுமாறு வெளியூரில் இருந்து வருகிறார் சசிகுமாரின் நண்பர் (எக்ஸ் எம்.பி-யின் மகன்). 'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' எனத் தொடை தட்டிக் கிளம்புகிறது சசிகுமார் அண்ட் கோ. நண்பனின்காதலியைக் கடத்தும் பரபர சேஸிங், ரேஸிங்கில் நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பு. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் பணயம்வைத்து இவர்கள் சேர்த்துவைத்த காதல் ஜோடி, சில நாட்கள் குடித்தனத்தில் தடாலென்று தடம் மாறி, தாலியைக் கழற்றி எறிந்து பிரிகிறார்கள். 'காதலுக்கு ஹெல்ப் பண்ற நண்பய்ங்க என்ன நொண்ணைகளா?' என்று பொங்கும் நாடோடிகளின் அதிரடி ஆவேசம்தான் மிச்சக் கதை.

'நண்பனின் நண்பன் நண்பனே' என்கிற நட்பு லைனில் விறுவிறு திரைக்கதையையும், பரபர ஆக்ஷனையும் இணைத்து, செம ஜாலி கதை பின்னி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அரசாங்க வேலைக்காக அப்ளிகேஷன் தட்டும் சசிகுமார், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருக்கும் பரணி, கம்ப்யூட்டர் சென்டர் லோனுக்கு அலையும் விஜய் என மூன்று நண்பர்களைப் பற்றிய அறிமுக எபிசோட் அசத்தல்.

'சரிங் மாமா' என எல்லாவற்றுக்கும் தலையாட்டும் 'வீட்டோட' மருமகன், 'வாழ்விழந்த இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக' வரும் ரித்தீஷ் டைப் சின்ன மணி கேரக்டர், மகனின் காதலுக்குத் தூது போகும் ஃப்ரெண்ட்லி அப்பா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குநர் செதுக்கி இருக்கும் விதம் அருமை.

சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு. ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் செல்லும்போது சசி குமாரின் முகத்தில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்கள். 'பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா' என்று காதலியின் தந்தையிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், கடைசியில், அதே டயலாக்கை வருத்தத்தோடு சொல்லிப் பிரிவதும் கவிதை. ஆனால், 'டேய்' என்று சசி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் 'சுப்ரமணியபுரம்' பரமன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்பா புள்ளையாக வரும் அமைதி 'சென்னை 28' விஜய்யும், ஜட்டியைத் தலையில் போர்த்தியபடி வலம் வரும் அடாவடி பரணியும் இயல்பான எதிரெதிர் துருவ நட்புப் பங்காளிகள். காது கேட்காமல் வீடு திரும்பும் பரணியை அவர் அப்பா அடிக்கும்போது, 'அப்பா நீ சொல்றது ஒண்ணுமே கேக்கலைப்பா!' என்று அவர் அழுது புலம்புவது எமோஷனல் எபிசோட்! சதா காலை ஆட்டிக் கொண்டு இருக்கும் விஜய்யின் அப்பா கேரக்ட ராக வரும் முத்துக்கிருஷ்ணன்... ஆஹா! பேங்க் பாஸ்புக்கைக் காண்பித்து மகனின் காதலுக்கு 'ஓ.கே' வாங்க முயல்வதும், காதலியோடு திரியும் மகனை கூலிங்கிளாஸ் கண்களோடு ரசிப்பதுமாக அசத்துகிறார்.

சசிகுமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா வுக்கு அறிமுகமாம்! சதா தீனிப் பண்டாரமாக, குறும்புப் பார்வையும் குசும்புப் பேச்சுமாக வெள்ளந்தித் தோழியாக ஈர்க்கிறார். சசிகுமாரின் கன்னத்தைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் பாசமும் 'என்னைக் கடத்துற சிரமத்தை நான் தர மாட்டேன். சிக்னல் மட்டும் காட்டு... சிட்டாப் பறந்து வந்திருவேன்' எனும் லூட்டியும், அட்றா சக்கை... அட்றா சக்கை!

கண்களாலேயே காதல் பேசிவிடும் அபிநயா கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளிலும் மனதைத் திருடுகிறார். (இயல்பான பெண்ணாகக் காட்சி அளிக்கும் இவருக்கு நிஜத்தில் பேச்சு வராது!)

'உங்க ஆட்டத்துல என்னைய ஏன்டா சேர்க்கிறீங்க?' என்று சசி கோஷ்டியிடம் கதறும் கஞ்சா கருப்பு... செம சிரிப்பு. படம் எடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் அதை ஃப்ளெக்ஸ் பேனரில் விளம்பரம் செய்யும் 'பப்ளிசிட்டி கோவிந்து' சின்னமணி (நமோ நாராயணன் -நிர்வாகத் தயாரிப்பாளர் - 'இங்கேயும் ஒரு பப்ளிசிட்டி!') தோன்றும்போதெல்லாம் கிபீர் குபீர் சிரிப்பு பட்டாஸ் கொளுத்துகிறார்.

வெட்டு, குத்து, அரிவாள், சாதி துவேஷ டயலாக்குகள் என கிராமத்து சினிமாவின் க்ளிஷேக்களைப் படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பது ஆறுதல். தொழில் அதிபர் பெண்ணைக் கடத்தும் அந்த டாப் கியர் எபிசோடுக்குப் பின்னணியாக வரும் 'சம்போ... சிவ சம்போ' பாடல் உறுமல் உத்வேகம் கூட்டுகிறது. வழக்கமான திருவிழாப் பாட்டு, 'வேற எந்த உறவையும்விட நட்புதான்டா பெருசு' என்று அடிக்கடி வரும் 'நட்பு பஞ்ச்'கள் மட்டும் பழைய மசாலா.

கட்டி முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேஷன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்று இருக்கிறது சுந்தர் சி.பாபுவின் இசை.

சசி அண்ட் கோ நண்பனின் காதலைச் சேர்த்து வைக்க என்னென்னவோ சாகசம் புரிகிறார்கள். ஆனால், காதலிக்கு போன் செய்து அவரை வரச் சொல்லும் சிம்பிள் ஐடியா மட்டும் அவர்களுக்குத் தோன்றவில்லையாம். மகனின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து நாமக்கல்லுக்குச் செல்லும் எக்ஸ் எம்.பி. அம்மா, அவர் கோவாவில் இருப்பதை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்காமலேயே இருக்கிறார். அத்தனை போலீசும் காதலர்களைத் தேட முடியாமல் தேமேவென சசி யின் வாய் பார்த்தே காத் திருப்பது 'கோடம்பாக்க' ஸ்டேஷனில்தான் சாத்தியம்.

நண்பனின் காதலியைக் கடத்தப் போகும் வழியில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சிக் குத்தாட்டம் போடுவது, கான்ட்ராக்ட் சமையல் வேலை என்று கதை திடீரென டிராக் மாறுவது போன்ற இடங்கள் கத்திரிக்குத் தப்பிய காட்சிகள்.

மெகா நீளம்தான் மைனஸ். ஆனால், அதையும் திகுதிகு திரைக்கதையால் மறக்கடிக்க வைக்கிறார்கள் ஜாலியான நாடோடி மன்னர்கள்!

நன்றி : விகடன்

நல்ல விமர்சனம் தான்! 43 மார்க் கொஞ்சம் கம்மி! உருப்படாத விஜய், அஜித் படத்துக்கெல்லாம் 40+ மார்க் போடும் போது இந்த படத்துக்கு இன்னும் அதிகமாவே போடலாம்.


திருந்தாத தமிழ் சினிமா!

மீபத்தில் M குமரன் S/O மகாலட்சுமி படம் பார்த்தேன். முதலில் நன்றாக துவங்கிய படம், நதியா இறந்த பிறகு மிகையாக மாறியது. தமிழ் சினிமாவிற்கே உரிய அம்மா, அப்பா, தங்கச்சி செண்டிமெண்ட், ஆபாசமான, அருவருக்க தக்க காமெடிகள், ஆங்கங்கே பாடல்கள், காதல் காட்சிக்கு மட்டும் ஹீரோயின். கடைசியாக வில்லனை வீழ்த்தி ஹீரோ ஜெயிப்பது, குடும்பத்தையும் காதலையும் சேர்த்து "சுபம்" போடுவது என்று டிபிகல் தமிழ் சினிமாவாக முடிந்தது. இந்த மாதிரி படங்களை எல்லாம் மூணு மணி நேரம் திரைஅரங்கில் பார்ப்பது கொடுமை. அடுத்தது என்ன நடக்கும், படம் எப்படி முடியும் என்பது பாதியிலேயே தெரிந்து விட்டது. இந்த படத்தில் வரும் அபத்தமான காட்சிகள், பொதுவாக எல்லா தமிழ் சினிமாவிலும் வரும்.

தங்கச்சியை வில்லன் கற்பழித்து விடுகிறான். வில்லன் கெட்டவன் என்று தெரிந்தும், அவனிடம் தங்கச்சியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஹீரோ கெஞ்சுகிறார். இறுதிப் போட்டியில் "நீ தோற்றால் உன் தங்கைச்சியை நான் கல்யாணம் செய்துக் கொள்கிறேன்" என்று வில்லன் சொல்வதை கேட்டு, வெற்றியை தியாகம் செய்யப் பார்க்கிறார். என்ன கொடுமை என்றால், ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால், அவன் தான் அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சாவதை தவிர அந்தப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை. ஒரு அய்யோகியனை கல்யாணம் செய்துக் கொண்டு அந்த பெண் எப்படி சந்தோசமாக வாழ முடியும்?
பெண்ணடிமைத்தனம் என்பது சினிமாவில் ஊறிப் போய் உள்ளது.

இரண்டாவதாக, காமெடி என்ற பெயரில் உடல் ஊனமுற்றோரையும், பெண்களையும், மனநிலை குறை பாடு உள்ளவர்களையும் அசிங்கப் படுத்துவது. இந்தப் படத்தில் வரும் காமெடியை போலவே (இன்னும் அசிங்கமாகவே) பல தமிழ் படத்தில் வருகிறது. இதையெல்லாம் எப்படி குடும்பத்தோடு ஒருவர் சென்று ரசிப்பது? பெண்களை இன்னும் sexual object ஆகவே சித்தரிக்கிறார்கள். கை, கால் ஊனம், திக்கு வாய், கண் பார்வை குறைவு, உடல் பருமன், சொட்டை தலை, என்று இந்த குறை பாடுகளை வைத்து காமெடி பண்ணுபவர்களே அதிகம். அந்த காலத்தில் கவுண்டமணி ஆரம்பித்தது. இன்னும் அதையே போட்டு அரைக்கிறார்கள்.

அடுத்தது, ஒரு கடை தெருவில் (அ) கோவில், காப்பி ஷாப், திரைஅரங்கு, பெரிய வணிக வளாகம் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் ஹீரோயினை (அ) ஹீரோவின் தங்கச்சியை வில்லன் கும்பல் கற்பழிக்க துரத்தும் (அந்த வில்லன் ஒரு மந்திரியின் மகனாகவோ, இல்லை பெரிய கடத்தல் காரனின் மகனாகவோ இருப்பார்). சிறிது நேரம் துரத்திக் கொண்டே இருப்பார்கள். கடைசியாக ஜாக்கெட்டை கிழிக்கும் போது ஹீரோவின் கை வந்து தடுக்கும். அதுக்கப்பறம் நடக்கபோவது தெரிந்ததுதான். பார்த்து பார்த்து சலித்து, புளித்து போய்விட்டது.

காதல் கட்சிகளுக்கும், சில ஆபாச அசைவுகளுக்கு மட்டுமே ஹீரோயின். வெள்ளை தோளோடு, குறைந்த பட்ச உடையோடு, கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலம் பேசிக் கொண்டு ஒரு லூசு போல வளம் வருபர்தான் இந்த ஹீரோயின். சுகாசினி, ஊர்வசி, ரேவதி போன்ற நடிகைகளுக்கு அப்பறம் யாரும் நடிக்கிற மாதிரி தெரியல. சினேகா, பார்வதி மாதிரி ஒன்னு ரெண்டு தான் தேறுது. இங்கேயும் பெண் ஒரு sexual object தான்.

மகள் கற்பமாக உள்ளது தெரியும் போது பூச்சி மருந்து வாங்கி தற்கொலைக்கு முயல்வது, அம்மாவை டைவர்ஸ் செய்யும் அப்பா, சித்தி கொடுமை, தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கும் பாடல்கள்...இன்னும் பல பல அபத்தங்கள்...

எப்போது திருந்தும் இந்த தமிழ் சினிமா?


Thursday, July 9, 2009

அமெரிக்க பொருளாதாரமும், அதிபர் ஒபமாவும்!

டந்த ஆண்டு பின்பாதியில் சரிய துவங்கிய பொருளாதாரம் இன்னும் மீண்ட பாடில்லை. உலக நாடுகளில் பலவற்றிலும் இந்த பாதிப்பு இருந்தாலும், மேற்கத்திய நாடுகளை அதிகம் பாதித்தது. பல பெரிய நிறுவனங்கள் திவாலானதால், வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது.வேலை இழந்தவர்கள் வேறு எங்கும் சேர முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர். வேலையில் இருப்போரோ எப்போது தூக்குவார்கள் எனத் தெரியாமல், தினம் தினம் பயத்துடனே அலுவலம் செல்கின்றனர். கல்லூரியிலிருந்து பட்டம் வாங்கிக் கொண்டு புதிதாக வெளிவரும் மாணவர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.

இந்த வருட துவக்கத்தில் அதிபர் ஒபாமா பதவியேற்றவுடன், எதாவது செய்து மாற்றம் கொண்டு வருவார் என மக்கள் எதிர் பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதிபர் ஒபாமா பதவி ஏற்கும் போது சரிவிலிருந்து மீள்வதற்கு முன்னால், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி அடையும் என்று சொன்னார். அது தான் இப்போது நடக்கிறதோ என்னவோ!

வேலை இல்லாதோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசின் கணக்கெடுப்பின்படி 9.5 சதவிகிதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததை விட 1% அதிகம். திவாலாகி கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் இருந்து $787 பில்லியன் டாலர்களை கொடுக்க முன் வந்தது அமெரிக்க அரசு. இதில் ஒரு சிறு பகுதியை ஏற்கனவே கொடுத்து முடித்து விட்ட நிலையில், இரண்டாவது தவணை தேவையா என்று பெரும் விவாதமே நடந்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளை மாளிகையின் கணக்குப் படி இந்த திட்டம் சுமார் ஆறு இலட்சம் வேலை வாய்ப்புகளை கோடை காலத்திற்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் ஒபாமா பதவி எற்புக்கு பின் சுமார் இரண்டு பில்லியன் வேலை வாய்ப்புகள் பறி போனது. இந்த stimulus திட்டம் ஒன்றரை இலட்சம் வேலைகளை மட்டுமே தக்கவைத்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால், இந்த திட்டம் தொடர வேண்டுமா என்று காங்கிரசில் விவாதம் நடந்து கொண்டுள்ளது.

குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், இந்த திட்டம் ஒபமாவின் தவறான முடிவு என்றும், இப்படி மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், அதிகாரிகளையும் வேறு விதமாக சொல்கிறார்கள். இந்த திட்டத்தின்படி பொருளாதரத்தை மீட்க இரண்டுவருடங்கலாவது ஆகும் என்றும், இப்போது அளித்துள்ள பணம் மிகக் குறைவானது என்று சொல்கின்றனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் $1.7 ட்ரில்லியன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு. இது அமெரிக்காவின் GDPஇல் 12% ஆகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் முதன் முறையாக இப்போதுதான் இவ்வளவு நிதிப் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.சமீபத்தில் Quinnipiac University எடுத்த வாக்கெடுப்பின் படி சுமார் 48 சதவிகிதம் பேர் ஒபமாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர். ஈராக் பிரச்னை, நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, தீவிரவாதம் என பல சவால்களை சூழ்ந்திருக்கும் அதிபர் ஒபாமா என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, July 2, 2009

ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ்

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமொன்ஸ் .... டேன் பிரவ்ன் இன் இரண்டாவது நாவல் திரைப்படமாக வந்துள்ளது. நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது சில பிரச்சனைகள் வரும். நாவலில் சுவராஸ்யமாக, ஒவ்வொரு சீனும் விலாவரியாக வர்ணிக்கப் பட்டு இருக்கும். அதை இரண்டு மணிநேரத்தில் படமாக எடுப்பது சிரமம். ஏற்கனவே வந்த டா வின்சி கோட், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த முறை கொஞ்சம் பரவில்லை...
கதையின் கரு அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள முரண்பாடு (அ) சண்டையை பற்றியது. இல்லுமினடி (Illuminati) என்ற ஒரு குழு பதினெட்டாம் நூற்றாண்டிலில் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் ஆடம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பழமைவாதிகளையும், அவர்கள் பேச்சை கேட்டு ஆட்சி நடத்திய அரசியல்வாதிகளையும் எதிர்த்து முற்போக்கு வாதிகளால் வழி நடத்தப்பட்டது. இந்த குழுவை ( Modern Illuminati) சேர்ந்த வில்லன், போப் இறந்தவுடம் அடுத்த போப்பாக வர வாய்ப்புள்ள நன்கு கர்டினல்களை கடத்திக் சென்று ஒவ்வொருவரையாக கொலை செய்கிறான். அதோடு இல்லாமல், Anti-matter எனப்படும் அணு சக்தி வை விட பல மடங்கு வலிமையுள்ள substance கடத்தி சென்று , அதை வைத்து ரோமையே அழிக்க முற்படுகிறான்.

இந்த கொலையாளியை கண்டுபிடிக்க, கர்டினல்களை காப்பற்ற குறியீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ராபர்ட் லங்க்டன் (Tom Hanks) ரோமுக்கு வருகிறார். Anti-matter உருவாக்கிய ஆராய்ச்சியாளரின் மகள் (Ayelet) ராபர்ட் உடன் சேர்த்து பேரழிவை தடுக்க முற்படுகிறார். ராபர்ட் எப்படி கொலையாளியை கண்டு பிடிக்கிறார், கொலையாளி யார் என்ற மர்மங்ககளை சிறிது சுவாரசியத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.

- அன்டி மாட்டார் உள்ள அறைக்கு செல்ல கண்ணின் கருவிழியை (Ratina) கடவுச் சொல்லாக பயன் படுத்துகிறார்கள். கதையின் படி, ஆராய்ச்சியாளரின் கண்ணை தோண்டி எடுத்து அதை வைத்து கொலையாளி உள்ளே செல்கிறான். அனால் தோண்டப் பட்ட கண்ணும் அவரது உடலும் அறைக்கு உள்ளே கிடக்கின்றன! லாகிக் படி ஆது அறைக்கு வெளியே தான் இருக்க வேண்டும். அல்லது உள்ளே இழுத்து சென்றதற்கான அறிகுறியாவது இருந்திருக்க வேண்டும்.
- பொது ( Public Place) இடத்தில கார்டினல்களை கொலை செய்யப் போவதாக சொல்லும் கொலையாளி, ஒருவரை மட்டுமே பொது இடத்தில் வைத்துக் கொள்கிறான். மற்ற இருவரும் கொள்ளப் படும் இடம் மக்கள் நடமாடும் இடமாக தெரியவில்லை
- அப்படி பொது இடத்தில் ஒரு காடினல்லை கொலை செய்யும் விதமும் இயல்பாக இல்லை. அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் சாதரணமாக ஒருவரை கிடத்தி விட்டு செல்கிறார்.

-ரோம் போலிசும், ஸ்விஸ்ஸ் கார்டும் என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதோ சாதரணமாக ஒரு கொலையை விசாரிப்பது போல் ஜாலியாக திரிகிறார்கள். ஹீரோ, ராபர்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற போலீசர்களை டம்மி ஆக்கிவிட்டார்கள். இதையெல்லாம் தாண்டி படம் நன்றாகத்தான் இருக்கிறது. ரோம் அதனை சுற்றியுள்ள இடங்களை நன்றாக கட்டியுள்ளனர். ரொம்பவும் போரடிக்காமல் கொஞ்சம் விறு விறுப்பாகவே போகிறது

Tuesday, June 16, 2009

யாரை நம்புவது?

வ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. ஒரு வருடத்திற்கு முன்னால் எதேச்சையாக யூடுபில் தென்பட்டது. சில வாரங்கள் மொக்கையாக இருந்தாலும், சிலது ரொம்ப நன்றாக இருக்கும். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா என்று வியப்பூட்டும். இந்த வாரம், எல்லோரிடமும் நம்பிக்கை வைக்கலாமா? கூடாதா? என்று ஒரு விவாதம். இதில் யாரையும் நம்பக்கூடாது என்ற பிரிவில் சிலர் பேசியது கொடுமையாக இருந்தது. ஒரு பெண் சொல்கிறார்: "அமாவாசையில் பொறந்தவனை நம்பமாட்டேன்! ஏன்னா, எங்க பாட்டி சொல்லியிருக்காங்க, அமாவாசையில பொறந்தவன் திருடனா இருப்பன்னு!". இன்னும் சிலர் குறிப்பிட ராசியில் பொறந்தவனை நம்பமாட்டேன் என்று சொன்னார்கள். ஏன்னா அந்த ராசிக்கும் அவங்களுக்கும் ஒத்துக்காதான்! ஒரு கணிப்பொறியாளர் சொல்கிறார் "ஆந்திர காரனையும், பெங்கலியையும் நம்ப மாட்டேன். இப்படி ஒவ்வொருவரும் சொன்ன காரணங்களை பார்த்த போது, ரொம்ப வேதனையாக இருந்தது.
இது மாதிரி நம்பிக்கை இல்லாதவங்களை அவ்வபோது பார்ப்பதுண்டு. அண்மையில், நண்பர் ஒருவருடன் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நாளே அவர் சொன்னார், "இந்த உலகத்துல யாரையும் நம்ப மாட்டேன். யாருமே நல்லவங்க இல்லை". அவருடைய நடவடிக்கைகளை பார்த்தல் ஒரு மாதிரி restless ஆகா இருக்கும். வெளியே கிளம்பறேன் ன்னு சொல்லிட்டு, திரும்பி தீடீர்ன்னு வந்து பார்ப்பார். எப்போதும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார். யாராவது நம்மளை நம்பிக்கை இல்லாமல் பார்க்கும் போது ஒரே எரிச்சலா வ்ரும். இந்த நம்பிக்கை இல்லா தன்மை முத்திப் போயி ஒரு மான நோயாளி மாதிரி ஆயிடறாங்க.

ஒன்றரை வருடமாக கல்லூரியில் கூடப் படித்த, ஒரே வீட்டில் வசித்த நண்பர், திடீரென்று யாரிடமும் பேசாமல் சற்று ஒதுங்கினர். என்னடாவென்று பார்த்தால், அவருடைய வேலை வாய்ப்பை நான் பறித்து விடுவேன் என்று அஞ்சி, பேசுவதை தவிர்த்து வந்தார்! நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஷாலினி சொன்னதுபோல், ஏதோ ஒரு சில கசப்பான நிகழ்ச்சிகளை மனதில் வைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த மக்களையும் அதே பார்வையில் பார்க்கின்றனர். ஒரு மலையாளி தவறு செய்தால், ஒட்டு மொத்த மல்லுக்களும் கேவலமானவர்கள் என்று நினைப் பவர்கள்! அடுத்தடுத்து சில மோசமான அனுபவங்கள் நேரும் போது, யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் போக, தனிமையில் கொஞ்சம் கொஞ்சம் ஆக மன வியாதிக்கு உட்படுபவர்களும் உண்டு. எல்லாரிடமும் அதீத நம்பிக்கை வைப்பது இந்த காலத்தில், இயலாத காரியம் என்றாலும், ஒரு சில நம்பிக்கைக்குரிய நண்பர்களையாவது பெறுவது அவசியம். கேட்காமலேயே பணம் வேண்டுமா என்று கேக்கும் நண்பனும், தன்னுடைய கடவுச் சொல்லகூட அவசரத்துக்கு என்னிடம் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர்கள் எனக்கு இருப்பதை நினைக்கும் பொது நிறைவாக உள்ளது.

Monday, May 25, 2009

இணையத்தில் தமிழ் பாடநூல்கள்


நண்பர் ஒருவர் இந்த இணையதள முகவரியை அனுப்பியிருந்தார். என்னவென்று பார்த்த பொழுது, ஒண்ணாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை அணைத்து பட நூல்களும் PDF கோப்புகலாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் மட்டும் அல்லாது, தெலுகு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளிலும் இருந்தன. ஸ்டேட் போர்டு தனியாகவும், Matriculation தனியாகவும் வகைப் படுத்தப் பட்டிருந்தது. இது தவிர, முக்கிய வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வசதியிருந்தது....அருமை!

பாடங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். தமிழ் பாடம்...நிறைய மாறியிருந்தது. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடம், அறிவியல் சம்பந்தமாக சில பாடங்களை காண முடிந்தது. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி போன்றோரின் சிறுகதைகள் இருந்தன. ஆனால் வழக்கமாக இருக்கும் செய்யும் பகுதி மட்டும் மாறவே இல்லை. அருஞ்சொற்பொருள், இலக்கணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். நல்ல தமிழ் எழுதப் பழகிக் கொள்ளலாம்! (வலைப் பதிவர்களுக்கு உதவும்).நேரம் இருந்தால் உலாவிப் பாருங்கள்.

அப்படியே, கொஞ்சம் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் பக்கம் சென்றேன். ம்ம் பரவாயில்லை. கொஞ்சம் மாறி இருக்கிறது.


இந்த முயற்சிகள் நகர் புறம் உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவும். நகர் புறங்களில் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இணையத்துடன் கூடிய கணிப்பொறி கிடைத்துவிடுகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் பயன்பெற கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பத்தாம் வகுப்பு, பணிரண்டம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளவே கணினியை பயன்படுத்துகிறார்கள்.

என்றாலும் ..இந்த நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

Sunday, May 24, 2009

டி ராஜேந்தரின் காதல் கவிதை

Friday, May 22, 2009

இந்த ஆண்டு ஐபிஎல்

கடந்த ஒரு மாதமாக பாடாய் படுத்திக் கொண்டிருந்த ஐபிஎல் முடியப் போகிறது. கடந்த ஆண்டு ICL க்கு போட்டியாக தொடங்கப்பட்ட இந்த தொடர் நல்ல வரவேற்பை வெற்றது. BCCI க்கு, அணி முதலாளிகளுக்கும், நட்சத்திர வீரர்களுக்கும் நல்ல பணம் கொழித்தது. உள்ளூர் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாகவும், சர்வதேச வீரர்களோடு பழகவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தி முடிக்க வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய 'மோடிக்கு' ஆரம்பத்திலேயே பிரச்னை. தேர்தல் நடப்பதால், போட்டிகளை நடத்த பாதுக்கப்பு கொடுக்க முடியாது என்று இந்திய அரசாங்கம் கைவிரித்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிப்போம் என்று கோதாவில் இறங்கிய BCCI, ஸௌத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நாடியது. இறுதியாக, "இந்தியன்" ப்ரீமியர் லீக் சவுத் ஆப்ரிக்க சென்றது.

இதை தொடர்ந்து, அணிகளில் பல குழப்பங்கள், மாற்றங்கள். கல்கத்தா அணியில் இருந்து கங்குலியின் காப்டன் பதவிக்கு கல்தா கொடுக்கப் பட்டது. மல்லையாவும் பீடர்சனை அதிக விலை கொடுத்து வாங்கி, கப்டனாகவும் ஆக்கினார். லட்மன் ஓரம் கட்டப் பட்டார். பிளின்ட் ஆப், டுமினி, வார்னெர், மொர்டச்சா போன்ற புதிய முகங்கள் வந்தன. மிகுந்த எதிர்ப்பார்போடு தொடங்கப்பட்ட IPLக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்த முறை எல்லா அணிகளும் சம பலத்தில் இருந்ததால், அரை இறுதிக்கு முன்னேறுவதில் கடுமையான போட்டி. KKR மட்டும் அடிமேல் அடி வாங்கியது. நல்ல வீரர்கள் இருந்தும், குழுவாக ஒன்று சேர முடியாமல் தோற்றுப் போனது. "போலி" IPL வீரரின் வலைப்பதிவால் மேலும் பல குழப்பங்கள். வெறுத்துப் போனே ஷாரூக், இந்திய ஓடிவிட்டார். சச்சின் னின் மோசமான தலைமையினால், மும்பை இந்தியனும் வெளியேறியது. ஜெயா சூரிய சோபிக்காதது பெரிய இழப்பு. சென்ற வருடம் இருந்த மார்ஸ், லீ , ஹோப்ஸ் ஆகியோர் இல்லாததால், பஞ்சாப் தடுமாறியது. யுவியும் ஒரு சில போட்டிகளை தவிர , பெரிசாக ஒன்னும் செய்யவில்லை. சாதரண அணியை வைத்துக் கொண்டு போராடிய ராஜஸ்தானும் வெளியேறியது. ஸ்வப்னில், பதான், ஜடேஜா, ஸ்மித் போன்றோர் சிறப்பாக விளையாடவில்லை.

சென்ற முறை அடிவாங்கிய பெங்களுரு, டெக்கான் அரை இறுதியில். சேவாக், காம்பிர் ஜோடி சோடை போனாலும் டெல்லி நன்றாக விளையாடியது. மோசமான பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு டோனியும் கரை ஏறி விட்டார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட டெல்லி, முதல் அரை இறுதியில் மூட்டை கட்டியது. கில்லி டெல்லியை பதம் பார்த்து விட்டார். அடுத்ததாக நாளை, சென்னை யும் பெங்களுரும் மோது கின்றன. யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனக்கென்னவோ சென்னை கோப்பையை வெல்லும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!!!

Sunday, May 17, 2009

தேர்தல் 2009 - ஒரு பார்வை

தேர்தல் முடிந்து விட்டது. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், கடினமான மேலாண்மைப் பணிகளில் ஒன்றாகக் கருதப் படும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். அரசியல் வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் ஒன்று நினைக்க, மக்கள் வேறொன்று நினைத்து விட்டார்கள். ஆனால், சரியான நல்ல தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள். இந்த முடிவில் இருந்து தெரிந்துக் கொள்ளக்கூடிய நல்ல , கெட்ட விசயங்களாக எனக்குப் பட்டவை:
  • இந்திய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து தேசிய கட்சிக்கு ஓட்டு அளித்து உள்ளனர். இந்திய போன்ற மிகப் பெரிய, இன, மொழிகளால் வேறுபட்ட நாட்டில் பல கட்சிகள் இருப்பது தவிர்க்க முடியாது. 1991க்கு பிறகு தேசிய கட்சிகளால் பெரும்பான்மை பெற முடியாததால், மாநில கட்சிகளையும், சிறு சிறு ஜாதிக் கட்சிகளையும் நம்பியே இருந்து வந்தது. இதனால் பல பிக்கல்கள், பிடுங்கல்கள். அனைவரையும் "திருப்தி" படுத்த வேண்டிய நிலை. எந்த ஒரு முடிவையும் தெளிவாக, உறுதியாக எடுக்க முடியாத நிலை. ஆட்சியை காப்பாற்றவே அதிக நேரம் செலவிடப் படவேண்டிய கட்டாயம். இந்த முறை கங்க்ரச்ஸ் அதிக இடங்களை பெற்றதால், நிலையான, உறுதியான அரசை எதிர் பார்க்க முடியும்.
  • பழையன கழிதலும் புதியன புகுதலும் - என்கிறது நன்னூல். காலத்துக் கேற்ப கொள்கைகளில் மாற்றம் வருவதில் தவறேதும் இல்லை. ஆனால், தோழர்கள் பிடிவாதமாக "பல" கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் இந்த முறை வலது, இடதுகளுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர். இனிமேலாவது, தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, கொஞ்சம் மாறினால் நல்லது. இல்லையெனில், மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் மறந்து விடவேண்டியது தான்.
  • அரசியல் பச்சோந்திகளை மக்கள் அடையாளமும் கண்டுக் கொண்டு விட்டனர். தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.
  • தென்னிந்தியாவில் அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்ஜியார், என்டியார் போன்றோரின் வெற்றி பலரையும் அரசியலுக்கு வர தூண்டியது; தூண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கி, ஆட்சியை பிடிக்க முயன்ற சிரஞ்சீவி தோல்வியை சந்தித்து இருக்கிறார். வெறும் பதினெட்டு தொகுதிகளோடு கனவு கலைந்தது. மிக சாதரணமாக வெற்றி பெறுவர் என்று எதி பார்க்கப்பட்ட சிரஞ்சீவி தனது சொந்த ஊரிலேயே தோல்வியை தழுவி இருக்கிறார்.திருப்பதியில் கூட வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. கட்சி ஆரம்ப விழாவில் கூடிய கூடத்தைக் கண்டு மிரண்டு போனவர்கள் இப்போது சிரிக்கிறார்கள். இவரின் தோல்வி மற்றவர்களை ஒருகணம் சிந்திக்க செய்யும்.
  • பொருளாதாரம் பாதிப்பு, விலை வாசி பிரச்னை, தொடர் குண்டு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், காங்கிரசஸ் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சரியான எதிக் கட்சி இல்லாதது. பாரதிய ஜனதா கட்சியை இன்னும் ஒரு முழு தேசியக் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது இந்துத்துவ கொள்கை. பல ஜாதி, மொழி, இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான கட்சியாக தங்களை சித்தரித்துக் கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம், தங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டல் அவர்களுக்கு நல்லது.
  • இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார் செய்ய ஊழல் செய்ய தூண்டும். சாமானியர்கள் தேர்தலில் நிக்க தயங்கும் நிலை ஏற்படும். இதற்கு ஏழை மக்களை குறை சொல்ல முடியாது. பணத்தேவையை பூர்த்தி செய்ய பணத்தை வங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டும் போடுகிறார்கள், நன்றி உள்ளவர்கள்!
  • அடுத்ததாக, அரசு இயந்திரத்தை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிவகங்கை, விருது நகரில் நடந்த குழப்பங்கள் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே உள்ளது. அரசு பணியாளர்கள் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் , நேர்மையாக பணியாற்றினால் நல்லது.

Saturday, May 16, 2009

இது எப்படி இருக்கு?












Disclaimer: None of the above photos or news are intended to character assassination. These are merely the creations of a light hearted Indian cricket fan.

Thursday, May 14, 2009

விகடன் விமர்சனம் : பசங்க


'நம்ம பசங்க இவங்க!' என்று உச்சி முகர்ந்து உலகத்துக்குச் சொல்ல, சமகால வரலாற்றில் தமிழில் ஒரு சிறுவர் சினிமா!

முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாண்டிராஜ். தியேட்டரில் அந்தப் பசங்களுடனேயே பயணித்துப் பிரிய மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் குழந்தைகளின் 'தேங்க்ஸ்' மொத்தமும் உங்களுக்கே உங்களுக்கு!சதா சண்டைக் கோழிகளாகப் பிரிந்து நின்று முட்டி மோதி மூக்குடைக்கும் குறும்புப் 'பசங்க' கதை. லிட்டில் டெரரிஸ்ட் ஜீவா. அப்பாவே வாத்தியாராக இருப்பதால், ஜீவாவின் அட்டகாசங்கள் ஊரையே உலுக்கியெடுக்கின்றன. கூடவே, கும்மாளமடிக்கும் சக ஜபர்தஸ்துகள் பக்கடா மற்றும் குட்டிமணி. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்கிறான் அன்புக்கரசு. ஆறாம் வகுப்பிலேயே 'அன்புக்கரசு ஐ.ஏ.எஸ்' என்று போட்டுக் கொள்ளும் ஸ்டூடன்ட் நம்பர் ஒன். முதல் நாளே அன்புக்கும் ஜீவாவுக்கும் மோதல். எதிரெதிர் வீட்டில் இருக்கும் இருவரின் குடும்பங்களும் தெருச் சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு வினையாகிறது விளை யாட்டுச் சண்டை. இவர்களுக்கிடையே மோதல்என்றால், அன்புவின் எல்.ஐ.சி. சித்தப்பாவுக்கும் ஜீவாவின் பால்வாடி டீச்சர் அக்காவுக்கும் காதல். காதல் ஜோடி இணையத் துடிக்க, மோதல் பசங்க பிரிக்கத் துடிக்க... யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக் கதை!

'தோளில் கை போட்டால் குட்டையாகிவிடுவேன்' என்கிற பயம், 'இந்த அடியை நாளைக்கு வரைக்கும் மறக்காதே' என்று அன்பைச் செல்ல அடியாக வெளிப்படுத்தும் பிரியம், 'அது எப்படிடா ஒருத்தனுக்கு ஒண்ணுக்கு வந்தா எல்லாத்துக்கும் வருது?' என்கிற சந்தேகம் என... பால்ய காலத்தின் பக்கங்களை ஜாலியாகப் புரட்டும் கதைநான் தயிர்சாதம்', 'நான் சர்க்கரைப் பொங்கல்', 'நான் புளியோதரை' என்று எதிரி வீட்டு முற்றத்தை நாசம் பண்ணும் ஜீவா அண்ட் கோ ஒரு பக்கம், இல்லாத பைக்கைக் கற்பனை யாக ஓட்டிக் கனவு காணும் அன்புக்கரசு இன்னொரு பக்கம் என அறிமுகக் காட்சிகளும் அவர்களுக்கான 'ஓப்பனிங் ஸாங்'கும் அசத்தல்.

கைத்தட்டலுக்கும் பாராட்டுக்கும் ஏங்கும் அன்புக்கரசு கேரக்டர் தமிழ் சினிமாவுக்கே புதிது. 'பெர்ஃபெக்ட் ஸ்டூடன்ட்' கேரக்டரில் கிஷோர் பக்கா பாந்தம். சதா சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அப்பா - அம்மாவைச் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போதும், வம்புக்கார ஜீவாவைச் சரிக்குச் சரி நின்று சமாளிக்கும்போதும் கிஷோரின் கண்களில் அத்தனை எக்ஸ் பிரஷன்கள்!

'குழந்தை வில்லன்' ஜீவாவாக ராம். அரசுப் பள்ளி வாத்தியார் பையன்களுக்கே இருக்கும் இயல்பான திமிர். வகுப்பில் தன்னைக் கண்டிக்கும் அப்பாவை, 'அவனை விட்டுட்டு என்னையத் திட்ற... இரு, அம்மாகிட்ட சொல்றேன்!' என்று எகிறும்போதும், அதே அப்பாவிடம் 'சிகரெட்டை விட்ருப்பா... எல்லாம் உன்னைக் கிண்டல் பண்றாங்க' என்று வரம் வாங்கும்போதும் தேர்ந்த நடிப்பு. தன் அப்பா, அன்புக்கரசுவைப் பாராட்டும்போதெல்லாம் ஜீவா முகத்தில் தெரிவது அக்னி நட்சத்திரச் சூடு!

ஜீவாவின் கைத்தடிகளாக வருகிற பக்கடா (பாண்டியன்), குட்டிமணி(முருகேஷ்) இருவரும் காªமடி ரவுடிகள். 'ஜீவா கோபமாயிட்டான். அவன் பணக் காரன்டா. சட்டைப் பையைக் கிழிச்சுக்குவான்டா!' என்று ஜீவாவை உசுப்பேத்தி, சில்லறைகளைச் சிதற வைக்கிற பக்கடாவின் ஐடியாக்கள் அத்தனையும் சிரிப்பு பாஸ்பரஸ். பக்கடா ஏத்திவிட... 'ம்ம்' என்று அதற்கு ஜால்ரா வாசிக்கிற குட்டிமணியின் பக்க வாத்தியம் அவ்வளவு அழகு. 'அம்மா... குஞ்சுமணி வெளியே வந்திருச்சு!' என்று ஓட்டை ஜட்டியுடன் அறிமுகமாகும் 'புஜ்ஜிமா' கார்த்திக் ராஜா குறும்பு ஹைக்கூ. இரு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போடும்போது, வாத்தியாரைப் பார்த்துக் 'கொன்னுருவேன்' என்று பிஞ்சு விரல் காட்டுவதும், பெண் குழந்தைகளிடம் அன்பு காட்டி ஆண் குழந்தைகளை அடித்துவைத்து 'எப்பூடி?' என்று கேள்வி கேட்டும், படம் முழுக்க ரகளை செய்கிறான். ஜீவாவின் அத்தைப் பெண் புவனேஸ்வரியாக வரும் தாரிணியின் கண்களில் கள்ளமில்லா சில்மிஷ காந்தம்!

'இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு?' என்று சதா மொபைல் மொக்கையில் பிஸியாகத் திரியும் எல்.ஐ.சி. ஏஜென்ட்டாக வரும் விமல், அறிமுகமா? ஆச்சர்யப்படுத்துகிறார். 'ஒரு பாலிஸிகூடக் கிடைக்கலை. எப்படியும் உங்கப்பா நம்ம காதலைச் சேர்த்துவைக்க மாட்டாரு. பழகுன பழக்கத்துக்கு ஒரு பாலிஸி யாவது போடேன்!' என்று காதலியிடமே கையெழுத்துக் கேட்பதில், டிரேட் மார்க் தமிழக விடலையைக் கண் முன் நிறுத்துகிறார். அட, 'சரோஜா' வேகாவா இது? பால்வாடியில் தூங்கி வழியும் சோப்ளாங்கி டீச்சராக, 'நீங்க என்னைப் பாராட்டுறீங்களா... இல்லை, ஓட்டுறீங்களா?' என்று குழம்புகிற அசட்டு அழகு ஃபிகராகப் பின்னியிருக்கிறார். 'கேணப் பய! கிறுக்கச்சி மாதிரி என்னைத் தனியாப் பேசவெச்சிட்டானே' என்று புலம்புவதும், புருவ நெளிவுசுளிவுகளிலேயே கதை பேசுவதுமாக... வேகா-ஆஹா!

செல்போன்களையே காதலுக்கு உதவும் உருப்படிகளாகக் காட்சிப்படுத்தியிருப்பது லவ்லி. 'மாமோய்! நீங்க எங்க இருக்க்க்க்க்க்கீங்க?' என்று ஆரம்பித்து, விதவிதமாகக் கதறும் ரிங்டோன்களையே காதல் காட்சிகளுக் குப் பின்னணி இசையாகச் சேர்த்திருப்பது ரசனை.ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் சொக்கலிங்கத்துக்கு (ஜெயப்பிரகாஷ்), ரோல்மாடல் வாத்தியார் கேரக்டர். தேவையான பாவனைகளைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அன்புக்கரசுவின் அப்பாவாக வரும் சிவக்குமாரும், அம்மாவாக வரும் செந்திகுமாரியும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான படியிலிருக்கும் வர்க்கங்களின் பெற்றோர்களைக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறார்கள்.

ஒரு நடுவாந்தர நகரம், அதன் மனிதர்கள், அதன் வருட முழுமைக்குமான இயக்கங்களை (தீபாவளித் தள்ளுபடி வண்டி, 'சார், கொஞ்சம் ஓரமா நின்னு சண்டை போடுங்க சார்' என்று அறிவித்து நகர்ந்து செல்வது வரை... பிரமாதம்!) அச்சு அசலாகப் படியெடுத்திருப்பதில், கலை இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சரிசம சபாஷ்! பருவங்களாக நகர்கிற கதையில் மழை, வெயில், வசந்தம் என்று கால நிலைகளைக் கச்சிதக் காட்சிகளாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில், 'அன்பாலே அழகாகும் வீடு...' மனதைப் பஞ்சாக இழையவைக்கிறது.

ஒரு சின்ன நகரத்தில் இப்படி ஒரு ஜோடி ஸ்கூட்டியில் வளைய வரும் விஷயம் வீடு வந்து சேர எத்தனை நாளாகும்? முதல் பாதியில் வேடிக்கை வினோதக் காட்சிகளே தொடர்வது, ட்விஸ்ட் அண்ட் டர்ன் எதிர்பார்க்கும் யுகத்தில், கொஞ்சம் நீளமே. அன்புவின் அப்பா குடம் தயாரிக்கும் ஃபேக்டரி ஆரம்பிக்கும்போதே கணவன்-மனைவி இருவரும் ராசியாகிவிடுகிறார்கள். அதற்கடுத்தும்விவாகரத்து அளவுக்கு வரும் குடும்பச் சண்டையும், சொக்கலிங்க வாத்தியாரின் அட்வைஸூம் திணிக்கப்பட்ட உணர்வையே தருகின்றன. படத்தின் பெரும்பான்மைக் காட்சிகளில் இல்லாத சினிமாத்தனம், அன்புக்கு ஆக்ஸிடென்ட் ஆவதில் இருந்து எட்டிப் பார்த்து, 'உள்ளேன் ஐயா' சொல்கிறது.பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இருவேறு உலகங்களை இணைத்து அத்தனை நல்ல விஷயங்களையும் சொல்கின்றன ஒவ்வொரு காட்சியும் வசனமும். பஞ்ச் பேசி, பறந்து அடித்து, ரிப்பீட் கதைகளால் ரிவிட் அடிக்கும் அத்தனை ஆல் கிளாஸ் மாஸ் ஹீரோக்களுக்கும் அலாரம் அடிக்கிறார்கள் இந்தக் குட்டிப் 'பசங்க.                                       

நன்றி : விகடன்           

Thursday, May 7, 2009

பள்ளிக்கூடங்கள் சித்ரவதை கூடங்களா?

கொஞ்ச நாள் முன்னாடி கழிப்பறை வசதி இல்லாமல் , பள்ளிகளில் படிக்கும் மாணவியர் எப்படி கஷ்டபடுரங்க ன்னு எழுதி இருந்தேன். இந்த மாதிரி விசயங்களை அரசுக்கு புரிய வைக்க இதுதான் சரியான நேரம். இளம் வக்கீல்களை கொண்டு நடத்தப் படும் பீப்பிள்ஸ் கார்டியன்' என்கிற அமைப்பு இந்த பிரச்சினை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இதைப் பற்றி இந்த வரம் ஜூ.வீ யில் வந்த கட்டுரை:

''கழிப்பிடம் கட்டித்தருவோம்னு எந்தக் கட்சி வாக்குறுதி குடுக்குதோ, அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு!'' என்றொரு வித்தியாசமான கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்காக 'கழிவறை கட்டிக்கொடு' என்கிற இயக்கம் ஆரம்பித்து, சென்னையில் பிரசாரத்தையும் ஆரம்பித்திருக்கிறது 'பீப்பிள்ஸ் கார்டியன்' என்கிற இளம் வழக்கறிஞர்கள் குழு. அதன் செயலாளர் பச்சைமுத்துவை சந்தித்துப் பேசினோம்.''பொது சுகாதாரம் சம்பந்தமான கருத்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போதுதான், பொதுக் கழிவறை இல்லாததன் பயங்கரங்களை உணர முடிந்தது.விடுதியும் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், வில்லிவாக்கத்தில் இருக்கும் மாணவர்கள் விடுதிகளும் மனிதர்கள் வசிக்கவே லாயக்கில்லாதவை.

கட்டணக் கழிப்பறைகள் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. ஒரு ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால்,ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பதற்கான நோய்களை வாங்கி வரலாம். அப்படியிருந்தும், துர்நாற்றம் பிடித்த கழிவறைகள் மொத்தத் தையும் அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். 'ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரும் அவர்கள், காசு வரும் என்பதற்காக கழிவறைகளையே ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்களே... அவர்களுக்கா நம்முடைய ஓட்டு?' என்பதுதான் எங்கள் பிரசாரம். பல்வேறு பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எங்களோடு களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் இந்தக் கோரிக்கையை கையிலெடுத்தால் பலன் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னதும் அவர்கள்தான். சென்னையில் மட்டுமே இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். ஒருவேளை அரசியல் கட்சிகள் இது குறித்து செவிசாய்க்கவில்லை என்றால், எங்கள் வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரும்!'' என்றார்.

'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது.

சுகாதாரமற்ற கழிவறையைப் பயன்படுத்தும் மாணவிகளுக்கு முதலில் சிறுநீரகத் தடத் தொற்று ஏற்பட்டு, அது கருப்பாதைக்குப் பரவி, வெள்ளைப்படுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. சிலருக்கு மலட்டுத் தன்மையும் உண்டாகிறது. மேலும், மாணவிகளின் இயல்பான உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இது நோஞ்சானாக்குகிறது. ஆக, 'ஒரு கழிவறை, நேரடியாக ஒரு பெண்ணின் கல்வி, உடல்நலம் ஆகியவற்றை பாதிப்பதோடு அவளுடைய அடுத்த தலைமுறையையும் பாதிக்கிறது' என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும், எட்டு லட்சியங்கள் அடங்கிய 'புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்குகள்' ஒன்றையும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதன்படி, 2015-ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து நாடுகளும் இந்த லட்சியங்களை அடைந்திருக்கவேண்டும். அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில், ஏழு லட்சியங்கள் பொது சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டவை.'ஒருவருக்கு வயிற்றுப் போக்கு. ஒரு வாரம் வேலைக்குப் போகவில்லை. கந்துவட்டிக்குக் கடன் வாங்குகிறார். கடனை அடைப்பதற்காக கிராமத்தை காலி செய்துவிட்டு நகரத்தில், பிளாட்பாரத்தில் குடியேறுகிறார். இந்த நிகழ்வுகள், பொது சுகாதாரம் இல்லாததால் ஒருவர் வறுமைக்குத் தள்ளப்பட்டதையே காட்டுகிறது. இது முதல் லட்சியமான 'வறுமை ஒழிப்பை' காலி செய்கிறது. இரண்டாவது லட்சியம், 'அனைவருக்கும் கல்வி' என்பது. கடந்த மாதம் மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர். கல்வியே கிடைக்காத பட்சத்தில் மூன்றாவது லட்சியமான 'பெண்கள் மேம்பாடு'ம் நிறைவேறாமல் இருக்கிறது. மேலும், சுகாதாரக் குறைவால் இந்தியாவில் இதுவரை 15 லட்சம் சிசு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது நான்காவது லட்சியமான 'சிசு மரணத் தடுப்பு'க்கு எதிரானது. கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேறிவிடுகிறது. இது ஐந்தாவது லட்சியமான 'கர்ப்ப கால ஆரோக்கியத்தை' பாதிக்கிறது. இப்படியாக பொது சுகாதாரம் எட்டப்படாததால்... அனைத்து லட்சியங்களும் நிறைவேறாமல் கிடக்கின்றன. 'நிர்மல் கிராம் புரஸ்கார்' என்னும் விருதை, திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 15 ஆயிரம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் பல கிராமங்கள் சுத்தமாகியிருக்கிறது. ஆனால், நகர சுகாதாரம் படுமோசமாக உள்ளது. எனவே, இதேபோன்ற விருதை நகர்ப்புறங்களுக்கும் வழங்கினால், சென்னை மாநகரமும் சுத்தமாகும். அந்த வகையில், கழிவறையைக் கட்டிக்கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை!'' என்றார்.

சுகாதாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாடுகளே தொற்று நோய்களின் வீரியம் கண்டு கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகமிக அதிகம். அப்படியிருக்க, மிகமிக அடிப்படையான விஷயங்களில் மளமளவென்று அடியெடுத்து வைத்து நாம் போவதுதானே புத்திசாலித்தனம்!

நன்றி : ஜூ வி


Friday, April 24, 2009

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்

ச்சினின் கிரிக்கெட் போலவே அவருடைய குடும்பப் பாசமும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள். பிறந்த நாள் அதுவுமாக தன்னுடையக் குடும்பத்தாரிடமிருந்து வந்த வாழ்த்துக்களை எண்ணி பூரித்துப் போகிறார் சச்சின். குறிப்பாக மனைவி அஞ்சலி மீதும் மகள் சாரா மீதும் சச்சின் காட்டும் அன்பு அலாதியானது. மனைவி சொல்லே மந்திரம் என்கிறார் சச்சின். அவளில்லையேல் அணுவும் அசையாது என்றும் சொல்கிறார் (ஆஹா என்ன அன்பு, எத்தனை அன்பு!).

சச்சினைக் கண்டாலே அலறும் உலகப் பந்துவீச்சாளர்கள் அவருடைய மறுபக்கத்தை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள். கிரிக்கெட்டை தவிர்த்து சச்சினின குடும்பப் பிணைப்பைப் பற்றி அறியும்போது நமக்கும் ஆச்சர்யம் வருகிறது.கிரிக்கெட் நுணுக்கங்களைப் போல குடும்ப நுணுக்கங்களான அன்பு, பாசம், அக்கறை, நகைச்சுவை எல்லாம் கலந்து கட்டியவர் சச்சின்.பேட்டால் பந்தை அடித்து ரன்களைக் குவிக்கும் சச்சின், அன்பால் மனங்களை அடித்து அதே அன்பை நிறையவே பெறுபவர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சச்சின். மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் அமர்ந்திருந்த சச்சினை மேடைக்கு அழைத்தனர். மேடையில் ஏறி மைக் பிடித்த சச்சின், முன்வரிசையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த மனைவி அஞ்சலியைப் பார்த்து சிரித்தபடியே,

”வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். ஆனால், என்னைப் பொருத்த வரை, அவள் பின்னால் இல்லை எனக்கு முன்னால் இருக்கிறாள்” என்றாரே பார்க்கலாம்.மனைவி குறித்த சச்சினின் இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.அதேசமயம் சச்சின் தன்னுடைய வெற்றியின் பின்னால் மனைவி மட்டுல்லாமல் மற்றும் இரண்டு பெண்களுக்கு இடமுண்டு என்றார்.

”என்னுடைய மன உறுதிக்கு அஞ்சலிதான் தூண். நான் தொய்வடையும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பவள் அவள். அதன் பிறகு என்னுடைய அம்மா. இவர்கள் இருவரும்தான் என் வாழ்க்கையின் பெரும்பான்மை பகுதியை ஆள்பவர்கள். மேலும் தற்போது அந்த குரூப்பில் என் குட்டி மகள் சாராவும் சேர்ந்துவிட்டாள்” என்றார்.சச்சின் தன்னுடைய பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளில் உச்சி முகர்வது மகளும் மகனும் தங்கள் கைகளால் செய்து அனுப்பிய வாழ்த்து அட்டைகளைத்தான்.

”அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்க்கும்போது தந்தையுடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அதேநேரம் மனைவியின் வாழ்த்தும் எனக்கு முக்கியமானது” என்கிறார் சச்சின்.அவருடையப் பிறந்தநாளின்போது நடந்த மறக்க முடியாத ஒன்றைப் பற்றி கேட்டால், ”1998 ஏப்ரல் 24ஆம் தேதி சார்ஜாவில் நடந்த  ட்ரைஆங்குலர் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் அடித்த சதம் அணியின் வெற்றிக்கு உதவியது” என்று நினைவுகூர்கிறார்.

உங்கள் எதிர்கால கனவு என்ன என்றால், ”நம்மை மறந்து உறங்கும் போதுதானே கனவு வரும்?” என்று கலாய்ப்பவர், ”உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்று சொல்கிறார்.சச்சின் சகலகலா வல்லவர்தான். பின்னே, என்னதான் மாபெரும் சாதனையாளராக இருந்தாலும் வீட்டில் பொண்டாட்டி மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆம்பளைக்கு தனித்தகுதி வேண்டாமா என்ன?

நன்றி : தமிழ்வாணன்


 
Watch the latest videos on YouTube.com