ஸ்லம் டாக் படம் வெளி வந்ததிலிருந்து பல சர்ச்சைகளை கிளப்பியது மும்பை குப்பம் பற்றிய காட்சியமைப்புகள். குப்பத்து மக்களின் வாழ்கையை மிக கேவலமாக காட்டியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அனைவரிடமும் இருந்து வந்தது. இது தொடர்பாக பல போராட்டங்கள், வழக்குகள் என்று பல எதிர்ப்புகள் மும்பை வாசிகளிடமிருந்தும் , குப்பத்து வாசிகளிடமிருந்தும் வந்தன.ஆனால் படம் பார்த்த சிலருக்கு இன்னொரு கருத்தும் இருந்தது. "உள்ளதை தானே காட்டியுள்ளனர். இந்தியாவில் இது போல பகுதிகளும் இருக்கிறதே! உண்மையை சொன்னால் கசப்பாக இருக்கிறது. இதை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் இல்லை என்று நம்மால் நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது".- இப்படி சொல்பவர்களையும் மறுத்து பேச முடியாது. ஆக, உண்மை நிலை என்ன என்பதை அங்கு உள்ளவர்கள் தான் சொல்ல வேண்டும். மும்பை தாரவி குப்பத்து வாசியான , சமூக சேவைக்காக 'மகசேசே' விருது பெற்றவருமான ஜோக்கிங் அற்புதம் எனும் தமிழர் ஜுனியர் விகடனுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அவருடைய பேட்டி கீழே:
Wednesday, February 25, 2009
மும்பை குப்பம் - சிறு பார்வை!
Sunday, February 22, 2009
ஆஸ்கார் 2009 - நேரடி ஒளிபரப்பு
Free Webcam Chat at Ustream
Saturday, February 21, 2009
ஆஸ்கார், A R ரஹ்மான்
- Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
- James Newton Howard - “Defiance”
- Danny Elfman - “Milk”
- Thomas Newman - “WALL-E”
- “Down to Earth” from “WALL-E” Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
- “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
- “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....
Friday, February 20, 2009
போர் பயிற்சியில் கபில்தேவ்!
Thursday, February 19, 2009
குடிபோதையில் ஜப்பான் நிதி அமைச்சர்!
Wednesday, February 18, 2009
'பாத்திரமறிந்து பிச்சை போடுவோம்! - தமிழருவி மணியன்
தமிழனத்தின் நலன்களை இந்திய அரசு புறக்கணிப் பதால்... தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிட்டதாகக் கொஞ்சம் கற்பனை செய்வோம். 'காரைக்குடி தண் ணீரைத் திருப்பத்தூருக்குத் தரக்கூடாது!' என்று உண்ணாவிரதம் இருந்தது திருமாவுக்குத் தெரியாதா? தமிழகத்தின் வட மாவட்டங்களைப் போல் தென் மாவட்டங்கள் கல்வி, தொழில், போக்குவரத்து போன்றவற்றில் வளர்ச்சியுறாமல் தேங்கி நிற்பதால், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!' என்று கோஷம் எழுப்பி, தங்கள் நலன் காக்கத் தனியே பிரிகிறோம் என்று சொன்னால் என்ன செய்வது? மீண்டும் தொண்டை மண்டலம், சோழ மண்டலம், தென்பாண்டி மண்டலம் தேவையா? கொசு கடிக்கிறது என்பதற்காக, குடியிருக்கும் வீட்டின் கூரையையா இடிப்பது?
'திராவிட நாட்டைப் பெறவும், அதற்கான காரியம் செய்யவும் நாம் தயாராக இருக்கவேண்டும். திராவிட நாடு, தனிநாடாகிவிட்டால் நமக்கு நம் ஆயுள்வரை ஓய்வு கிடைக்காது. திராவிடன் என்ற பெயரையும், 'திராவிட நாடு' தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதையும் நாம் குறிச் சொல்லாகவும், லட்சியத் திட்டச் சொல்லாகவும் கொண்டாக வேண்டும்' [குடியரசு-29.01.1944] என்று அறைகூவல் விடுத்த பெரியார், தன்னுடைய குரலுக்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மூன்றும் சிறிதும் செவிசாய்க்கவில்லை என்றதும் 'திராவிடநாடு' கோரிக்கையைக் கைவிட்டு, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கொடியைக் கையில் எடுத்தார். 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மட்டும் அவர் மாற்றவில்லை. 'ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன் வந்துவிடுவார்கள். அவர்களைத் தவிர்க்கவே 'தமிழர்' என்று சொல்வதற்கு பதில் 'திராவிடர்' என்கிறேன்' என்றார் பெரியார். திருமாவளவன் கேட்பது திராவிட நாடா? அல்லது பெரியார் விளக்கிய திராவிடத் தமிழ்நாடா? புரியவில்லை!
தன்னுடைய தள்ளாத வயதிலும் குடலிறக்க நோய் தந்த துயரத்தைச் சகித்து, மூத்திரச் சட்டி யுடன் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தன்னலமின்றி, பதவி வேட்கையற்றுமக்களைச் சந்தித்த பெரியாரின் பிரிவினை முழக்கத்துக்குத் தமிழகம் தலைசாய்க்கவில்லை.'திராவிடப் பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படு கின்றன; வளங்கள் பறிக்கப்படுகின்றன; தனித் தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களி லிருந்து மீளத்தான் நாங்கள் தனிநாடு கேட்கிறோம் என்று (நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் - 25.01.1963) அண்ணா முழங்கினார்.
பின்னர், 'திராவிட நாடே கழகத்தின் குறிக் கோள்!' என்று பிரகடனம் செய்த கழகத்தின் 2-வது விதியை நீக்கி, அதற்கு பதிலாக, 'தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது...' என்று ஒருமனதாக மாற்றியது தி.மு.கழகத் தலைமை. அந்த 'திராவிடக் கூட்டமைப்பு' கூக்குரலும் காலநடையில் ஓசையற்றுப் போனது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அண்ணல் அம்பேத்கர், 'இந்தியா பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாகப் பல நாடுகள்இணைந்து இந்தியக் கூட்டாட்சி உருவாகாத தால்,இந்தியாவிலிருந்து பிரிந்து போகக்கூடிய உரிமை எந்த மாநிலத் துக்கும் இல்லை. அது அழிக்க முடியாத கூட்டாட்சி என்பதால் 'ஒன்றியம்' எனப்படுகிறது. இந்த நாடும், அதன் மக்களும் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்திய நாடு ஒன்றாகக் கலந்துவிட்ட ஒரு முழுமையான நாடு. அதன் மக்கள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்த, தனித்த ஓர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருபவர்கள்!' என்று விளக்கியதை 'திராவிடர் நாடு திருமாவளவன்கள்' அறிதல் நலம். காந்தியிடம் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்துக்காக, வருணாசிரம இந்து மதம் தீண்டாமை மூலம் தலித்களைத் தாழ்த்தப் பட்டவர்களாக ஆக்கியதற்காக, காந்தியையும் காங்கிரஸையும் இந்து மதத்தையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்கர், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் குழி தோண்டவில்லை!
ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும், மலையகத் தோட்டத் தமிழரின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேலிகளைத் தாண்டி, கருத்து வேற்றுமைகளை மீறி ஒன்றாகக் கைகோத்து ஓங்கிக் குரல் கொடுக்கவேண்டிய தருணத்தில் தங்கபாலுவும் திருமாவளவனும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனக் கணைகளை வீசிக்கொண்டிருப்பதால்... கசப்பான எதிர்விளைவுகளே ஏற்படும்.
அங்குலம் அங்குலமாக... சாவை நோக்கி நகரும் உண்ணாவிரதத்தை மகாத்மா 18 முறை தன் வாழ்வில் மேற்கொண்டார். ஒரு முறைகூட உண்ணாவிரத நோக்கம் நிறைவேறாமல், அதிலிருந்து அவர் விலகியதில்லை. பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையப்பம் இட மறுத்திருந்தால், எரவாடா சிறையில் மகாத்மா மரணத்தைத் தழுவி யிருப்பார். மகாத்மா மேற்கொண்ட உண்ணா விரதம் வேள்வி. இன்றைய அரசியல் மேடைகளில் அரங்கேறும் உண்ணாவிரதம் நாடகம். முத்துக்குமார், சென்னை அமரேசன், சீர்காழி ரவிச்சந்திரன் பாதையைப் பின்பற்றி எந்த இளைஞரும் தீக்குளிக்கவேண்டிய அவசியமில்லை. அஞ்சலிக் கூட்டங்களில் வீரவுரையாற்றும் எந்த அரசியல் தலைவராவது தீக்குளிப்பாரா? அந்த அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் யாராவது தீக்குளிக்க அவர்கள் அனுமதிப்பார்களா?
சென்ற நாடாளுமன்றத் தேர்த லில் நாற்பது இடங்களையும் ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணிக்கு அளித்த தமிழினம், வரும் தேர்தலில் ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக நின்ற கட்சிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். இப்போதிருக்கும் மத்திய அரசு, ஈழ மண்ணில் மரணத்துடன் போராடும் தமிழர்களுக்கு மருந்தும் உணவுப் பொருளும் பிச்சை போடுவதே புண்ணியம் என்ற போக்கில் செயற்படுகிறது. 'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாருமில்லை; பிச்சை எடுப்பவனைக் காட்டி லும் பரிதாபத்துக்குரியவன் யாருமில்லை' என்றார் ருஷ்யப் படைப்பாளி மாக்ஸிம் கார்க்கி. அரசியல் கட்சிகளுக்கு வாக்குப் பிச்சையும், அதன் மூலம் வாழ்க்கைப் பிச்சையும் அளிப்ப வர்கள் வாக்காளர்கள். நாம், பாத்திரமறிந்து... வரும் தேர்தலில் பிச்சை போடுவோம்.
இப்போதைய நம் நோக்கம், ஈழத் தமிழரும் மலையகத் தமிழ ரும் இன்னல் தீர்ந்து வாழ்வதுதான். அதற்கு திராவிட நாடு, தனித் தமிழ்நாடு கோஷங்கள் கால் காசுக்கு உதவாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்றும் எதிரெதிராகக் கொடி பிடித்து, கோஷம் இடுவதை நிறுத்திவிட்டு... இனியாவது கூடிக் குரல் கொடுப்போம். 'என் வீரர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்... ஒருவர்கூட படையில் இருக்கமாட்டார்கள்!' என்றான் மகா ஃபிரெடரிக். ஈழப் பிரச்னையில் நம் அரசியல் தலைவர்கள் அன்றாடம் நடத்தும் நாடகத்தைப் புரிந்துகொண்டால்... அதன் பின் ஒருவர்கூட இவர்கள் பின்னால் இருக்கமாட்டார்கள்!
நன்றி : விகடன், தமிழருவி மணியன் |
Sunday, February 15, 2009
ஆஸ்திரேலியா -நியூஸ்லாந்து ட்வென்டி - 20 கிரிக்கெட் ஹை-லைட்ஸ்
Saturday, February 14, 2009
விகடன் விமர்சனம்: நான் கடவுள்
பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் 'ருத்ர தாண்டவம்'!
'அஹம் பிரம்மாஸ்மி' - அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற 'அகோரி'யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார் முரட்டு ஆர்யா. அதே ஊரில் இருக்கிறது, உடல் சிதைந்த மனிதர்களையும் ஊனப்படுத்தப்பட்டவர்களையும் பிச்சை எடுக்கவைக்கிற தாண்டவனின் 'ஊனமுற்றவர்கள் தொழிற்சாலை.' அதில் சிக்கிக்கொள்கிறார் பார்வையற்ற பூஜா. இரக்கமற்ற அரக்கர்களிடம் சிக்கிச் சிதையும் பூஜாவுக்கு ஆர்யா அளிக்கும் மோட்சம் என்ன என்பதே கடவுள் கதை!
ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' நாவலைத் தழுவி, விரிகிறது திரைக்கதை. கவன எல்லைக்குள் வராத பிச்சைக்காரர்களின் துயரங்கள், கொண்டாட்டங்கள், உறவுகள் ஆகியவற்றை முதன்முதலாகத் திரையில் கொண்டுவந்ததற்காக இயக்குநர் பாலாவுக்குப் பாராட்டு! உடல் கலைந்த, உயிர் மிஞ்சிய ஜீவன்களை உருப்படிகளாக்கி பரிதாபப் பிச்சை எந்திரங்களாக மாற்றும் கொடூரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதே போல, இது வரை நாம் அதிகம் அறிந்திராத அதிர்ச்சியாக, 'நான் கடவுளாகி' வரமும் சாபமும் வழங்கும் அகோரி சாமியார்களைப் பற்றி பாலீஷாகச் சொல்கிறார். இரண்டு வகை மனிதர்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருப்பது ரசிக்கத்தக்க புத்திசாலித்தனம்! கங்கைக் கரையெங்கும் பிணங்கள் எரிய, வேதகோஷங்கள் முழங்க, சந்நியாசிகள் நர்த்தனமாட... தலைகீழ் தவம் புரிந்தபடி ஆக்ரோஷமாக ஆர்யா அறிமுகம் ஆகும் காட்சி, ஒரு தமிழ் சினிமா நாயகனுக்கு 'ரௌத்ர ஆரம்பம்'. அலை பாயும் கண்களும், அலட்சிய மேனரிஸமுமாகப் பார்த்துப் பழகிய ஆர்யாவா இது? சிவந்த கண்களில் வெறித்த பார்வை, விறைப்பான உடம்பு, முறைப்பான நடை, கனல் வெப்பத்தையும் கனமான அர்த்தத்தையும் சுமந்து வரும் சிக்கன வார்த்தைகள், ரணகளச் சண்டையின்போதும் சடாரென ஆசனம் போட்டு அமரும் லாகவம் என நிஜ காலபைரவனாக நம் மனதில் ஆசனமிடுகிறார் ஆர்யா. பார்வையற்ற பிச்சைக்காரப் பாடகியாக பூஜா, உருக்கத்தால் உலுக்கி எடுத்திருக்கிறார். குழந்தைக்குப் புத்திமதி சொல்வது போல ஆர்யாவுக்கு 'அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடுகிறபோது... சபாஷ் பூஜா. தன் கேர் டேக்கரின் முதுகில் தொற்றிக்கொண்டு வருவது, புழுதிக் காட்டில் புரள்வது என இவர்தான் கதையின் நாயகி! 'உருப்படி'களின் ஏஜென்ட்டாக வரும் கிருஷ்ணமூர்த்தியின் பாத்திரப் படைப்பு மனுஷத்தனம் மிக்க அழகு. 'வசூலைக் கெடுத்துராதீங்கடா!' என்று தன் கீழுள்ள பிச்சைக்காரர்களிடம் கெஞ்சும்போதும், போதையில் அவர்களை இழுத்துவைத்துக் கொஞ்சும்போதும் ரசிக்கவைக்கிறார். வில்லன் தாண்டவனாக வரும் ராஜேந்திரனின் விஸ்வரூபம் அசத்தல். மொட்டைத் தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாச வில்லன். கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனைப் பார்த்து, 'நல்ல உருப்படி... நமக்கு வேலை வைக்கல' என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டி எடுக்கிறார். 'தாயே மகாலட்சுமி, ஆதிலட்சுமி, வரலட்சுமி...' என்றெல்லாம் இறைஞ்சியும் காசு போடாத பெண்ணை 'ஏய்! ஜோதிலட்சுமி' என்கிற குசும்பிலும், 'அம்பானி யாரு?' என்றதும், 'செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்ற நக்கலிலும் தெறித்துச் சிரிக்கவைக்கிறான் வடுகப்பட்டி செந்தில். கடவுளைக் கண்டபடி வசை பாடும் கவிஞர் விக்கிரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டும் திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வரும் 'கோவை' கிருஷ்ணமூர்த்தி, கூத்தாடும் 'நயன்தாரா' என சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யத்துக்குக் கை கொடுக்கிறார்கள். 'இவனையும் சீக்கிரம் தொழிலதிபர் ஆக்கிட்டா, ஏதாவது ஒரு நடிகைக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிடலாம்' என்று பிச்சைக்காரர்கள் கதைத்துக்கொள்ளுமிடங்களில் சிரிக்கவைக்கும் ஜெயமோகனின் வசனம், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் சீரியஸாகக் கவனிக்கவைக்கிறது. காசியின் மொத்த குணத்தையும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிற கட் ஷாட்கள், பொட்டல் காட்டின் நடுவே அண்டர்கிரவுண்ட் பிச்சைக்காரர்களின் கிடங்கு, மலைக் கோயில் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா அனலும் அழகுமாக வெளிப்படுகிறது. ஒரிஜினல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டைக் காட்சிகளில் ஆர்யாவின் ரௌத்ரத்துக்கு ஏற்ப மிரட்டல் மேஜிக் செய்திருக்கிறார் 'சூப்பர்' சுப்பராயன்! இத்தனை இருந்தாலும், மீண்டும் மீண்டும் பாலாவின் முந்தைய படங்களைப் பார்ப்பது போன்ற களைப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை! விறைத்த உடம்புடன் நடக்கும் அசாதாரண மனிதர்களைத் தாண்டி, பாலாவிடம் வேறு கதை நாயகர்கள் உருவாக மாட்டார்களோ? போலீஸையும் கோர்ட்டையும் மையமாக்கிய காமெடிகளும் பாலாவின் வழக்கமே! ஆர்யாவின் தாய் அழும் காட்சிகள் சீரியல் எபிசோட். என்னதான் கிராமமாக இருந்தாலும் ஒரு பொட்டல் காட்டில், கட்டி முடிக்கப்படாத கோயிலின் அடியிலேயே பிச்சைக்காரர்கள் கோடவுன் இயங்குகிறது என்பதும், வெளிநாட்டுத் தூதர்கள் கணக்காக பிசினஸ் பேச ஆட்கள் வந்து போகிறார்கள் என்பதும் நம்ப முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் கோயில் படிக்கட்டுகளிலும் பிச்சைக்காரர்கள் கோடவுனிலும் தேங்கி நின்றுவிடுகிறது. இறுதிக் காட்சியில் பாலாவின் வழக்கமான படங்களுக்கு நேர் எதிராக பூஜா பேசும் அத்தனை நீளமான டயலாக் அலுப்பு. பிச்சைக்காரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் அதிர்ச்சி கொடுத்தாலும், போகப் போக காமெடியாகி அவர்கள் வாழ்க்கையின் அவலச் சுவையே நகைச்சுவையாகிப் போவதால், அழுத்தம் குறைகிறது. தனித்தனிக் காட்சிகளில் தென்படும் பிரமிப்பு, ஒட்டுமொத்தப் படத்தை இணைத்து இழுத்துச் செல்லும் மைய இழை மிஸ் ஆவதால்... கடவுளின் கழுத்து மாலையில் ஏதோவொரு நெருடல்! இருந்தாலும், இந்தக் களம் புதிது! அந்தப் புது அனுபவத் துக்கும் புயல் உழைப்புக்கும் தரிசிக்கலாம், பாலாவின் கடவுளை!
நன்றி - விகடன் விமர்சனக்குழு
Friday, February 13, 2009
காதலர் தின ஸ்பெஷல்
Wednesday, February 11, 2009
உலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாதனை
செய்தி: சேலத்தில் நடந்த உலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாதனை புரிந்தனர்.சேலத்தில் நடந்த வேல்டுகப் 2009 க்கான வேல்டு ஆல்ட் மார்ஷியல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, கொரியா நாடுகளில் இருந்து மாணவமாணவிகள் பங்கேற்றனர்.
சப்ஜுனியர் 10 வயதுக்கான 20 முதல் 25 கி., பிரிவுக்கான கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மெட்ரிக்., பள்ளி மாணவர் ராகுல்பாபு ( கோல்டு மெடல்) முதலிடம், 16 வயதுக்கான ஜுனியர் 40 முதல் 45 கி., எடை பிரிவில் லூயிஸ்லெவல் மெட்ரிக்., உயர்நிலை பள்ளி மாணவர் மருதுபாண்டி(சில்வர் மெடல்) இரண்டாம் இடம், 40 முதல் 50 கி., எடை பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகமதுபாசில் (சில்வர் மெடல்) இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் ராஜாகுரன்சேதுபதி, செயலாளர் செல்லத் துரை அப்துல்லா, தலைமை பயிற்சியாளர் குகன், துணை பயிற்றுனர் பாலமுருகன், விளையாட்டு ஆசிரியர்கள் ரமேஷ் பாபு, ஜான்சன், கிழவன்சேதுபதி, நவநீதன், பிரபாகரன் பாராட்டினர்.
Sunday, February 8, 2009
அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை
இட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே
மெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே
ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே
தாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா
இவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா
இருக்கும் சேதியும் கேளடா
தனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா
அவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா
பொழுதைக் கழிக்கிறார் பாராடா
செல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா
இவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா
அடைப்பது எந்த நாளடா
கொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா
இவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா
பார்த்து எத்தனை நாளடா
பத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா
இவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா
காரோட்டிச் செல்கிறார் பாரடா
ஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா
இவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா
சொந்த ஊரில் இருப்பாரடா
பெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா
இவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா
வருத்தப் படுகிறார் ஏனடா
குழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா
அட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா
வாழ்க்கை முறை இது தானடா
- ஆசை ஆசைத்தம்பி
Saturday, February 7, 2009
காதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி பதினான்காம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் ஆனந்தக் கூச்சலிட, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினர் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ என்னும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு.வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த‘தினங்கள்’. அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும்,பூங்கொத்துகளிலும், சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.
காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும்,அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம். ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்.
உணவகங்கள், கடைகள் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிற இதய வடிவ பலூண்களும், மன்மதன் அம்புடன் நிற்கும் படங்களும், பூக்களும் தான். இவையெல்லாம் காதலின் சின்னங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறப்பு உணவுகள் காதலர் தினத்துக்கென்றே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல காதலர் தின திட்டங்களும் உள்ளன. சிறிய அளவில் ஆரம்பித்து இரண்டு கோடி ரூபாய் வரை செலவில் இவை நடைமுறையில் உள்ளன. ஹெலிகாப்டரில் சுற்றுதல், மிக மிக ஆடம்பர உணவகத்தில் உணவு, அரச மரியாதை என பணத்தை உறிஞ்சும் திட்டங்கள் அவை.
காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் பள்ளி இறுதியாண்டு முடித்து வெளியே வரும் மாணவ மாணவியர் கற்போடு இருந்தால் கேலிக்குரியவர்களாய் பார்க்கப் படுவார்கள். இந்தியாவிலும் அதே போன்ற ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.டிஸ்கோதேக், இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இந்த காதலர் தினத்தின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
கிபி இருநூறாம் நூற்றாண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம்.
பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
எப்படியெனினும், வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக ஆரம்பித்தது கவனிக்கத் தக்கது.சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்த காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது.
பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக ஊர்ஜிதமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது.காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 24ம் தியதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள். அதாவது பிப்ரவரி 14ம் தியதி பரிசு வாங்கியவர்கள் மார்ச் 14ம் தியதி பதில் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம். கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்த பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம்.
தென்கொரியாவில் நவம்பர் 11ம் தியதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் ( ஆகஸ்ட் கடைசி பகுதி ) காதலர் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காணும் வேலை ஆண்களுக்கு.
பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் பன்னிரண்டாம் தியதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது.
கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. அமீகோ சீக்ரட்டினோ - எனப்படும் ரகசிய ஸ்நேகிதனே விழாவும் அங்கே பிரபலம். பின்லாந்தில் நண்பர்கள் தினமாக இது கொண்டாடப்படுவதால் காதலுக்கு உரிய முக்கியத்துவம் இந்த விழாவிற்கு இல்லை. ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தியதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்த்து அட்டை தயாரிக்கும் ஹால்மார்க் போன்ற நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்.
தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா பயணமா ? சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும், சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்.
நன்றி : அ.சேவியர்