Sunday, November 22, 2009

சகாயம் ஐ ஏ எஸ்

இந்த வாரம் விகடனில் வந்த கட்டுரை.... இப்படியும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது .

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.

நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

நன்றி : விகடன்

Thursday, October 1, 2009

உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து தியேட்டருக்கு சென்று பார்த்த படம். நல்ல படம். கமல், மோகன் லால், அவருக்கு கீழ் பணிபுரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், டிவி நிருபர் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.வசனத்தை சிறப்பாக எழுதி இருந்தார் முருகன். ஒளிப்பதிவும் மிக அருமை. ஹிந்தி படத்தை விட மிக அருமையாக இருந்தது. செயற்கையான பாடல் கட்சிகள் இல்லாமல், காமெடி என்ற பெயரில் ஆபாசம் செய்யாமல் இரண்டு மணி நேரத்தில் விறு விறுப்பான படம்!

படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, கமல் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு படத்தின் வெற்றியைப் பற்றி சிலாகித்து பேசினார். Youtube இல் பார்த்தேன். அதிர்ந்தேன். தான் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது போல பேசி மற்றவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்தார். ஸ்ருதியைப் பற்றி பேசியதை விட மற்றவர்களை பற்றிப் பேசியது ரொம்ப கம்மி. பலரும் வசனத்தை பெரிதும் பாராட்டினர். உண்மை. வசனங்கள் எல்லாம் மிக அருமையை இருந்தது. ஆனால், படத்தின் வசனகர்த்தாவான முருகனைப் பற்றி பேச்சே இல்லை. அவருடைய பேரை எந்த இடத்திலும் உச்சரிக்கவே இல்லை! அதை விடக் கொடுமை, இந்தக் கதையை தானே சிந்திததுபோல் பேசியதுதான். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணம் படத்தின் கதை. அது கதையின் சொந்தக் காரரான நீரஜ் க்கு மட்டுமே போய் சேரும்.

இன்னொரு கொடுமை மோகன் லாலைப் பற்றி பேசாதது. உண்மையிலேயே , கமலை விட எனக்கு லாலின் நடிப்புதான் பிடித்திருந்தது. அனுபம் கேர் ரை விட பல மடங்கு சிறப்பாக செய்து படத்தை துடிப்புடன் கொண்டு செல்பவர் அவர்தான். இப்படி எல்லாரையும் இருட்டடிப்பு செய்து, ஏன் இப்படி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் தான் மகளைப் பற்றி ஒரே பேச்சு. கமல் ஒரு சிறந்த நடிகர் , நல்ல சினிமா அறிவுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மற்றவரை பாராட்டும் குணம் இப்பொழுது அவரிடம் குறைந்து வருகிறது. "நான்" என்ற ஆணவமோ?

இந்தக் கதையைப் போல, சுயமாக சிந்தித்து, வருங்காலத்தில் நல்ல படங்களை ( தசாவதாரம் போல் இல்லை!) கமல் எடுப்பார் என்று நம்புவோமாக.

Friday, September 18, 2009

விகடன் விமர்சனம் : ஈரம்

னதில் ஈரம் இல்லாதவர்களை அந்த 'ஈரம்' பழி வாங்கினால்... அதுதான் கதை!அபார்ட்மென்ட் குளியல் அறையில் இறந்துகிடக் கிறார் சிந்து மேனன். கள்ளக்காதல் விவகாரம்தான் சிந்துவின் மரணத்துக்குக் காரணம் என அடித்துச் சொல்கிறது அக்கம்பக்கம். ஆனால், 'நிச்சயம் சிந்து அப்படிப்பட்டவர் அல்ல' என்று உறுதியாக நம்புகிறார் காவல் துறை விசாரணை அதிகாரியான ஆதி. காரணம், அவரும் சிந்துவும் முன்னாள் காதலர்கள். தற்கொலைக்கான ஆதாரங்களை ஒதுக்கிவிட்டு, கொலைக்கான சந்தேகங்களைத் தோண்டித் துருவுகிறார் ஆதி. ஆனால், சிந்துவின் மரணத்தைத் தொடர்ந்து அதே அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கள் மூவர் கொடூரமாக மரணம் அடைகிறார்கள். நான்காவது மரணத்தை நேரில் பார்க்கும் ஆதிக்கு கொலைகளைச் செய்வது மனிதர்கள் அல்ல; ஒரு அமானுஷ்ய சக்தி என்பது தெரிகிறது. சிந்து மேன னின் மரணம் கொலையா, தற்கொலையா,தொடர்ச் சியான மரணங்களுக்குக் காரணம் என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது ஈரம்!

ஓர் இடத்தில்கூட பேயைக் காட்டாமல், தண் ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன். மிக இயல்பாக ஆதி-சிந்துமேனன் காதல் நினைவுகளும், சிந்து மேனன் மரணத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல் பாதி அசத்துகிறது. கொலை நடக்க இருக்கும்போது எல்லாம் ஆதிக்கு குறிப்பு உணர்த்த வரும் சிவப்பு நிறம் ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ. நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கேரக் டராகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது தண்ணீர் காட்சிகள். காதல் மயக்கமும் போலீஸ் புன்னகையுமாக ஆதி அட்டகாசப்படுத்துகிறார். கல்லூரி இளைஞனின் அசட்டையிலும் காவல் அதிகாரியின் இன்டெலி ஜென்ட்விறைப்பிலும் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். சிவப்பு ப்ளஸ் தண்ணீர் குறிப்புகளைக் கடக்கும்போது எல்லாம் ஆதியின் பதற்றம் நமக்கு உதறலைக் கொடுக்கிறது. இயல்பான அழகுடன் இருக்கும் சிந்து மேனன் அதே இயல்புடன் நடிக்க வும் செய்கிறார். திருச்சி கல்லூரியின் சராசரி மாணவி, புது மணப் பெண் எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை. வில்லனாக நந்தா. டி.வி-யில் ஒளிபரப்பாகும் பாடலை சிந்து மேனன் முணுமுணுக்க, அது பிடிக்காமல் நொடிக்கு ஒரு முறை மாறும் நந்தாவின் முகபாவங்கள் கிளாஸ்.

கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம். சிந்துவின் மரணத்துக்கு யார் காரணம் என்கிற ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாகச் சொல்கிறார்கள். கொலையாளி
யார் என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே! ஆனால், அதன் பிறகும் க்ளைமாக்ஸ் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. தண்ணீரை வசப்படுத்தி சகலரையும் சாகடிக்கும் வல்லமைபெற்ற சிந்துவின் ஆவி, நந்தா விஷயத்தில் மட்டும் தட்டுத் தடுமாறுவது ஏனோ? தன்னிடம் ஒருவன் சொன்னதை நந்தாவிடம் சொல்லும் வாட்ச்மேனைக் கூடவா சிந்து மேனனின் ஆவி கொல்லும்?

அறிமுகம் என்றாலும் தமனின் பின்னணி இசை படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்று கிறது. நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!


நன்றி : விகடன்


Wednesday, September 9, 2009

இலவச திருமணங்கள் தேவையா?

எப்போதான் இந்த இலவசங்கள் நிற்குமோ? இரண்டு லட்சத்து 29 ஆயிரம் திருமணங்களை நிதி கொடுத்து நடத்தியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும். எத்தனையோ பேர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இல்லாமலும், துணி இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர். இங்கு என்னடா ன்ன, இலவச தொலைக்காட்சியும், பொங்கல் வெய்க்க மாளிகை சாமானும், குறைந்த விலையில் தரமான மதுவும் கொடுக்கிறார்கள். மக்கள் பணத்தில் தனது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுகிறார்கள். கடைசியாக "இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது" என்று சொல்லி தனது ஆசையையும் வெளிப்படுத்திவிட்டார் தலைவர்.



செய்தி:


சென்னை :""தி.மு.க.,வின் குரலை அடக்க தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். தி.மு.க., சார்பில், 86 ஜோடிகளுக்கு நேற்று அண்ணா அறிவாலயத் தில் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை வீட்டுத் திருமணம் என்றால், 5,000 ரூபாய் வீதம் தந்து, பின் 10 ஆயிரம் ரூபாய் என விரிவாக்கி, 20 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.



ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் நிதி அளிக்கப்பட்டு நடந்த திருமணங்கள், இரண்டு லட்சத்து 29 ஆயிரம். அந்தப் பெரும் கடலில், இன்று நடக்கிற இந்த 86 திருமணங்களும் இணைகின்றன. இது என் 86 வயதைக் குறிக்கும் அடையாளமாக நடக்கிறது.வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறும்போது ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டுத் தான் கிளம்பினேன். வாரத்தில் ஐந்து நாட்களாவது என் இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடக்கிறது. இங்கு 86 திருமணங்களை நடத்தி அவர்களுக்கு தரப்பட்ட சீர்வரிசைகள், விளக்கு, குடம், வேறு பொருட்கள், இவற்றை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கூட இப்போது நமக்கு திருமணம் நடந்திருக்கக் கூடாதா என்ற ஆசை ஏற்பட்டது.



அந்த அளவுக்கு பளபளக்கும் விளக்குள், குடங்கள், தாம்பாளங்கள், மெத்தைகள், தலையணைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு நடத்தும் திருமணங்கள் இன்றி தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். நெருக்கடி காலத்தில், கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு, நம் கட்சியினர் சீர்திருத்த திருமணங்களில் கலந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், நெருக்கடி, அடக்குமுறைகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, கட்சியை தழைக்கச் செய்யும் வல்லமை தி.மு.க.,வினருக்கு உண்டு.எந்த வசதிகள் இருந்தாலும், எந்த வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டாலும், நம் குரல் ஓங்கி ஒலிக்கும். ஏனெனில், இது ஈ.வெ.ரா.,வின் குரல்; அண்ணா துரையின் குரல். இந்தக் குரலை அடக்க எந்த சக்தியும் தமிழகத்தில் இல்லை என்றார்.


நன்றி: தினமலர்

Monday, August 3, 2009

வாங்க, பழகலாம்!


ஜோசு என்ற புத்த ஞானி, மடத்தின் வரவேற்பறைக்குள் நுழைந் தார். தான் சந்தித்த முதல் துறவியைப் பார்த்து, ''உங்களை இதற்கு முன் சந் தித்திருக்கிறேனா?'' என்று கேட்டார். துறவி, ''இல்லை'' என்று பதிலிறுக்கவே, ''அப்படியானால் என்னுடன் தேநீர் அருந்துங்கள், வாருங்கள்!'' என்றார் ஞானி.

அடுத்து, உள்ளே நுழைந்த மற் றொரு துறவியைக் கண்ட ஜோசு, ''உங்களை இதற்கு முன் சந்தித்திருக் கிறேனா?'' என்ற அதே கேள்வியை எழுப்பினார். ''ஆம் சுவாமி! நான் உங்களை முன்பே சந்தித்திருக்கிறேன்!'' என்றார் துறவி. ''அப்படியானால் மிகவும் மகிழ்ச்சி! வாருங்கள், என்னு டன் தேநீர் அருந்துங்கள்!'' என்றார் ஞானி.

இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்த புத்த மடத்து நிர்வாகியான துறவி, ஞானி ஜோசுவைப் பார்த்து, ''சுவாமி! இரண்டு துறவிகளின் இரண்டு வித மான பதில்களுக்கும் நீங்கள் ஒரே விதமாகப் பதில் கூறி, அவர்களைத் தேநீர் அருந்த அழைத்தீர்கள்! உங்கள் செயல் எனக்குப் புரியவில்லையே?'' என்று தயங்கியபடி கேட்டார்.

''நீங்கள் இன்னும் இங்கேயேதான் இருக்கிறீர்களா?''

''ஆம் சுவாமி!''

''அப்படியானால் வாருங்கள். என் னுடன் கொஞ்சம் தேநீர் அருந்துங் கள்!'' என்று புன்னகைத்தார் ஞானி.

இப்படி ஒரு கதை 'ஜென்' கதை உண்டு.

அன்புள்ள வாசகர்களே! நீங்கள் இன்னமும் இங்குதான் இருக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள், கொஞ்சம் தேநீர் அருந்துங் கள். பேசுவோம்...


ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி மதிக்கிறான் (உள்ளுறவு), பிற ருடன் எப்படிப் பழகுகிறான் (உலக உறவு) என்பதை வைத்துத்தான் அவனை ஊரும் உலகமும் எடை போடுகிறது!

அமெரிக்காவில் நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தீர்களா னால், இந்தியா போல யாரும் அங்கு பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு உங்கள் அறிவை மீண்டும் சோதிப்பதில்லை. நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காணச் செய்கிறார்கள். அதன் மூலம், பிறரு டன் அவரால் எளிதாகப் பழக முடி யுமா, அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப்போக முடியுமா என்று பார்க்கிறார்கள்.

'என்னைப் பாராட்டும் ஒருவனை, உலகின் இரண்டாவது பெரிய மனித னாக நான் நினைக்கிறேன்!' என்றொரு வாசகம் உண்டு. இனிமையாகப் பழகும் ஒருவனிடம் எல்லோரும் இனிமையாகப் பழகத் துவங்குகிறார் கள். ஹாஸ்யமாகப் பேசும் ஒருவனு டன் இருப்பதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள். பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன் வருகிறது.

அறிவு, திறமை, கற்பனை, துணிச்சல், முடிவெடுக்கும் திறன், வியூகம் என்ற இவற்றுடன் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான மிக முக்கிய குணம் 'பழகும் தன்மை'தான்.

அதிகாரத்தின் முன்னிலையிலோ, செல்வாக்கின் முன்னிலையிலோ, பணத்தின் பின்பலத்திலோ, ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும். ஆனால், பிறருடன் உங்களால் அனு சரித்துப்போக முடியவில்லை என் றால், சுமுகமாகப் பழக முடியவில்லை என்றால், உங்கள் பதவி நிலைக்காது. அரசியல் உலகில் இத்தகைய ஆர்ப் பாட்டக்காரர்களின் பதவி ஆட்டம் காண்பதையும், பிறகு அவர்கள் பிறர் காலில் விழுவதையும் அன்றாடக் காட்சியாகக் காண்கிறோமே!

பிறருடன் பழகுதல் என்பது ஒரு கலை. வாருங்கள், பழகுவோம்!


நன்றி : விகடன்

Sunday, July 26, 2009

நீயா நானா - அருமையான விவாதம்!

நல்ல நீயா நானா ஷோவில் இதுவும் ஒன்று.


Part 1

Friday, July 10, 2009

நாடோடிகள் - விகடன் விமர்சனம்

ட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

சசிகுமார், பரணி, விஜய் மூவரும் கண்களில்கனவோடும் தோள்களில் தினவோடும் ராஜபாளையத்தை ரவுண்ட் கட்டும் நண்பர்கள். ஒரு பெருந் தொழில் அதிபரின் மகளான தன் காதலியைச் சேர்த்துவைக்க உதவுமாறு வெளியூரில் இருந்து வருகிறார் சசிகுமாரின் நண்பர் (எக்ஸ் எம்.பி-யின் மகன்). 'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' எனத் தொடை தட்டிக் கிளம்புகிறது சசிகுமார் அண்ட் கோ. நண்பனின்காதலியைக் கடத்தும் பரபர சேஸிங், ரேஸிங்கில் நண்பர்கள் மூவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பு. கிட்டத்தட்ட வாழ்க்கையைப் பணயம்வைத்து இவர்கள் சேர்த்துவைத்த காதல் ஜோடி, சில நாட்கள் குடித்தனத்தில் தடாலென்று தடம் மாறி, தாலியைக் கழற்றி எறிந்து பிரிகிறார்கள். 'காதலுக்கு ஹெல்ப் பண்ற நண்பய்ங்க என்ன நொண்ணைகளா?' என்று பொங்கும் நாடோடிகளின் அதிரடி ஆவேசம்தான் மிச்சக் கதை.

'நண்பனின் நண்பன் நண்பனே' என்கிற நட்பு லைனில் விறுவிறு திரைக்கதையையும், பரபர ஆக்ஷனையும் இணைத்து, செம ஜாலி கதை பின்னி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அரசாங்க வேலைக்காக அப்ளிகேஷன் தட்டும் சசிகுமார், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருக்கும் பரணி, கம்ப்யூட்டர் சென்டர் லோனுக்கு அலையும் விஜய் என மூன்று நண்பர்களைப் பற்றிய அறிமுக எபிசோட் அசத்தல்.

'சரிங் மாமா' என எல்லாவற்றுக்கும் தலையாட்டும் 'வீட்டோட' மருமகன், 'வாழ்விழந்த இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக' வரும் ரித்தீஷ் டைப் சின்ன மணி கேரக்டர், மகனின் காதலுக்குத் தூது போகும் ஃப்ரெண்ட்லி அப்பா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குநர் செதுக்கி இருக்கும் விதம் அருமை.

சசிகுமாரிடம் கேரக்டருக்குத் தேவையான நடிப்பு. ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கச் செல்லும்போது சசி குமாரின் முகத்தில் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்கள். 'பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு மாமா' என்று காதலியின் தந்தையிடம் இருந்து எஸ்கேப் ஆவதும், கடைசியில், அதே டயலாக்கை வருத்தத்தோடு சொல்லிப் பிரிவதும் கவிதை. ஆனால், 'டேய்' என்று சசி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் 'சுப்ரமணியபுரம்' பரமன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்பா புள்ளையாக வரும் அமைதி 'சென்னை 28' விஜய்யும், ஜட்டியைத் தலையில் போர்த்தியபடி வலம் வரும் அடாவடி பரணியும் இயல்பான எதிரெதிர் துருவ நட்புப் பங்காளிகள். காது கேட்காமல் வீடு திரும்பும் பரணியை அவர் அப்பா அடிக்கும்போது, 'அப்பா நீ சொல்றது ஒண்ணுமே கேக்கலைப்பா!' என்று அவர் அழுது புலம்புவது எமோஷனல் எபிசோட்! சதா காலை ஆட்டிக் கொண்டு இருக்கும் விஜய்யின் அப்பா கேரக்ட ராக வரும் முத்துக்கிருஷ்ணன்... ஆஹா! பேங்க் பாஸ்புக்கைக் காண்பித்து மகனின் காதலுக்கு 'ஓ.கே' வாங்க முயல்வதும், காதலியோடு திரியும் மகனை கூலிங்கிளாஸ் கண்களோடு ரசிப்பதுமாக அசத்துகிறார்.

சசிகுமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா வுக்கு அறிமுகமாம்! சதா தீனிப் பண்டாரமாக, குறும்புப் பார்வையும் குசும்புப் பேச்சுமாக வெள்ளந்தித் தோழியாக ஈர்க்கிறார். சசிகுமாரின் கன்னத்தைப் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் பாசமும் 'என்னைக் கடத்துற சிரமத்தை நான் தர மாட்டேன். சிக்னல் மட்டும் காட்டு... சிட்டாப் பறந்து வந்திருவேன்' எனும் லூட்டியும், அட்றா சக்கை... அட்றா சக்கை!

கண்களாலேயே காதல் பேசிவிடும் அபிநயா கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளிலும் மனதைத் திருடுகிறார். (இயல்பான பெண்ணாகக் காட்சி அளிக்கும் இவருக்கு நிஜத்தில் பேச்சு வராது!)

'உங்க ஆட்டத்துல என்னைய ஏன்டா சேர்க்கிறீங்க?' என்று சசி கோஷ்டியிடம் கதறும் கஞ்சா கருப்பு... செம சிரிப்பு. படம் எடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் அதை ஃப்ளெக்ஸ் பேனரில் விளம்பரம் செய்யும் 'பப்ளிசிட்டி கோவிந்து' சின்னமணி (நமோ நாராயணன் -நிர்வாகத் தயாரிப்பாளர் - 'இங்கேயும் ஒரு பப்ளிசிட்டி!') தோன்றும்போதெல்லாம் கிபீர் குபீர் சிரிப்பு பட்டாஸ் கொளுத்துகிறார்.

வெட்டு, குத்து, அரிவாள், சாதி துவேஷ டயலாக்குகள் என கிராமத்து சினிமாவின் க்ளிஷேக்களைப் படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பது ஆறுதல். தொழில் அதிபர் பெண்ணைக் கடத்தும் அந்த டாப் கியர் எபிசோடுக்குப் பின்னணியாக வரும் 'சம்போ... சிவ சம்போ' பாடல் உறுமல் உத்வேகம் கூட்டுகிறது. வழக்கமான திருவிழாப் பாட்டு, 'வேற எந்த உறவையும்விட நட்புதான்டா பெருசு' என்று அடிக்கடி வரும் 'நட்பு பஞ்ச்'கள் மட்டும் பழைய மசாலா.

கட்டி முடிக்கப்படாத பாலம், பிரமாண்ட கிணறு என விதவித லொகேஷன்களில் அழகு காட்டும் எஸ்.ஆர்.கதிரின் கேமரா, சேஸிங் ஸீன்களில் வேகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் படத்தை வேறு தளத்துக்குச் எடுத்துச் சென்று இருக்கிறது சுந்தர் சி.பாபுவின் இசை.

சசி அண்ட் கோ நண்பனின் காதலைச் சேர்த்து வைக்க என்னென்னவோ சாகசம் புரிகிறார்கள். ஆனால், காதலிக்கு போன் செய்து அவரை வரச் சொல்லும் சிம்பிள் ஐடியா மட்டும் அவர்களுக்குத் தோன்றவில்லையாம். மகனின் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து நாமக்கல்லுக்குச் செல்லும் எக்ஸ் எம்.பி. அம்மா, அவர் கோவாவில் இருப்பதை மட்டும் கடைசி வரை கண்டுபிடிக்காமலேயே இருக்கிறார். அத்தனை போலீசும் காதலர்களைத் தேட முடியாமல் தேமேவென சசி யின் வாய் பார்த்தே காத் திருப்பது 'கோடம்பாக்க' ஸ்டேஷனில்தான் சாத்தியம்.

நண்பனின் காதலியைக் கடத்தப் போகும் வழியில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சிக் குத்தாட்டம் போடுவது, கான்ட்ராக்ட் சமையல் வேலை என்று கதை திடீரென டிராக் மாறுவது போன்ற இடங்கள் கத்திரிக்குத் தப்பிய காட்சிகள்.

மெகா நீளம்தான் மைனஸ். ஆனால், அதையும் திகுதிகு திரைக்கதையால் மறக்கடிக்க வைக்கிறார்கள் ஜாலியான நாடோடி மன்னர்கள்!

நன்றி : விகடன்

நல்ல விமர்சனம் தான்! 43 மார்க் கொஞ்சம் கம்மி! உருப்படாத விஜய், அஜித் படத்துக்கெல்லாம் 40+ மார்க் போடும் போது இந்த படத்துக்கு இன்னும் அதிகமாவே போடலாம்.


 
Watch the latest videos on YouTube.com